மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தை சேர்ந்தவர் ஷோபா சஞ்சய் (38). இவருக்கு 19 வயதில் ஒரு மகளும், 18 வயதில் ஒரு மகனும் இருக்கின்றனர். மகள் கீர்த்தி கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தன் குடும்பத்தை எதிர்த்து, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் கீர்த்தியின் குடும்பத்தினர் அவர் மீது கடும் கோபத்திலிருந்தனர். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, கீர்த்தியின் தாயார் ஷோபா, அவர் சகோதரர் சங்கட் சஞ்சய் ஆகியோர் சமாதானம் பேசுவது போல் கீர்த்தியின் வீட்டுக்கு சென்றிருக்கிறார்கள். அவர்கள் வந்தவுடன் கீர்த்தியின் கணவர் பேசிக்கொண்டிருங்கள் என்று சொல்லிவிட்டு பக்கத்து அறைக்கு சென்றிருக்கிறார். அந்த நேரத்தில் சங்கட் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் கீர்த்தியை சரமாரியாக வெட்டியிருக்கிறார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அலறல் சத்தம் கேட்டு, பக்கத்து அறையிலிருந்து ஓடி வந்த கீர்த்தியின் கணவர் சம்பவத்தை நேரில் பார்த்ததும் தன்னையும் கொலை செய்துவிடுவார்கள் என்று அஞ்சி அங்கிருந்து ஓடிவிட்டார். கொலை செய்த பிறகும் ஆத்திரம் தணியாத கீர்த்தியின் தாயாரும், சகோதரரும், அவர் தலையை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வெளியில் வந்து அக்கம்பக்கத்தினரிடம், “எங்களின் விருப்பத்துக்கு எதிராக திருமணம் செய்ததால் கொலை செய்தோம்” என்று தெரிவித்தனர். மேலும், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலையோடு தங்களது மொபைல் போனில் செஃல்பி எடுத்துக்கொண்டனர். பின்னர், இருவரும் போலீஸில் சென்று சரணடைந்தனர். அவர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது குறித்து இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கூறுகையில், “கீர்த்தியை அவர் அம்மாவும், சகோதரனும் பார்க்க சென்றபோது அவர் கணவர் பக்கத்து அறைக்கு சென்றுவிட்டார். கீர்த்தி தன் தாயாருக்கு தேநீர் தயாரிப்பதற்காக சமையல் அறைக்கு சென்றிருக்கிறார். அவரை பின்தொடர்ந்து சமையல் அறைக்கு சென்ற சங்கட் தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் பின் புறமாக ஒரே வெட்டாக வெட்டி கொலை செய்தார். பின்னர், அவர்களாகவே சரணடைந்து விட்டார்கள். கொலை செய்யபட்ட கீர்த்தி கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது” என்று தெரிவித்தார்.