கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகிலிருக்கும் மோக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜோஸ்பின் (32). இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்ட இவர், தன் மகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், மற்றொருவர் ஜோஸ்பினை காதலித்து மறுமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது. அதனால், மனம் நொந்த ஜோஸ்பின் இது தொடர்பாக பளுகல் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றிருக்கிறார். காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்த சுந்தரலிங்கம் (40) அவருக்கு உதவுவதாக கூறி ஜோஸ்பினை பல இடங்களுக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
அதனால், ஜோஸ்பின் கர்பமடைந்ததாகவும் கூறப்படுகிறது. கற்பமான தகவலை சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கத்திடம் கூறியிருகிறார் ஜோஸ்பின். எஸ்.ஐ சுந்தரலிங்கம் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைப்பதாக கூறி, தன் நண்பர்களுடன் ஆட்டோவில் அனுப்பிவைத்திருக்கிறார். அவர்கள் திருவட்டாரை அடுத்த புலியிறங்கி என்னும் பகுதியில் டாக்டர் கார்மல் ராணி என்பவரின் கிளினிக்குக்கு ஜோஸ்பினை அனைத்துச் சென்றிருக்கின்றனர். ஜோஸ்பினுக்கு மருத்துவ பரிசோதனை செய்வதாக கூறிய டாக்ர்டர் கார்மல்ராணி கருவை கலைத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜோஸ்பின், கிளினிக் அருகிலேயே கத்தி கூச்சல் போட்டிருக்கிறார். இதையடுத்து ஜோஸ்பினை சிலர் தக்கலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். பின்னர், எஸ்.ஐ சுந்தரலிங்கத்தின் தூண்டுதலின்பேரில் கண்ணுமாமூட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு ஜோஸ்பின் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஜோஸ்பினின் மொபைல் போன் மற்றும் உடமைகளையும் பறித்ததோடு அவர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து களியக்காவிளை காவல் நிலையம், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம், டி.எஸ்.பி அலுவலகம் மற்றும் எஸ்.பி அலுவலகத்திலும் ஜோஸ்பின் புகார் அளித்திருக்கிறார். ஆனாலும் தனக்கு நியாயம் கிடைக்காததால், இதுபற்றி குழித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டப்பட்ட எட்டுபேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் சுந்தரலிங்கம், பளுகல் காவல் நிலைய காவலர் கணேஷ் குமார் (35), விஜின் (34), மார்த்தாண்டத்தைச் சேர்ந்த அபிஷேக்( 25 ), களியக்காவிளையை சேர்ந்த உமேஷ் (45 ), கருவைக் கலைத்ததாகக் கூறப்படும் டாக்டர் கார்மல் ராணி (38), காரக்கோணம் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் தேவராஜன் (57), அனில் குமார் உட்பட 8 பேர் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எட்டுபேரில் ஒருவர் பத்திரிகையாளர் எனக் கூறப்படுகிறது. புகார் அளிக்கச் சென்ற பெண்ணை கர்ப்பமடையச் செய்ததாக சப் இன்ஸ்பெக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: கன்னியாகுமரி: ‘கஞ்சா வாங்கிய இளைஞர்கள்; கொலையில் முடிந்த தகராறு; இருவர் கைது!’