கர்நாடக மாநிலம் குண்டல்பேட் பகுதியில் இருந்து நீலகிரி வழியாக கோவை மாவட்டத்திற்கு லாரி ஒன்றில் பல டன் அளவுக்கு தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கடத்தப்படுவதாக நீலகிரி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்திருக்கிறது. இந்தத் தகவலின் அடிப்படையில் வாகன சோதனையை தீவிரப்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வந்தனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கர்நாடகாவில் இருந்து தேங்காய் மட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்த லாரியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் ஆய்வு செய்தனர்.தேங்காய் மட்டைகளுக்கு இடையே சில மூட்டைகள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டு மூட்டைகளை பிரித்து பார்த்த போது அதனுள் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இது குறித்து குன்னூர் காவல்துறையினர்,”கர்நாடக மாநிலம் குண்டல்பெட்டில் இருந்து குன்னூர் வழியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு குட்கா மூட்டைகளை கடத்திச் செல்ல முயற்சித்தது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.8 லட்சம் இருக்கும். குட்கா கடத்திய குண்டல்பெட் பகுதியைச் சேர்ந்த ராஜூ, குருராஜி, சுரேஷ் ஆகிய 3 பேரை கைது செய்து குன்னூர் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினோம். குட்கா கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம்” என்றனர்.