கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியது. நேரம் போக மழையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டிருந்தது.
Also Read: கோவை: லிவிங் டுகெதர் உறவில் தகராறு?! – காதலன்மீது ஆசிட் ஊற்றி கத்தியால் குத்திய காதலி
தொடர் மழையால் கோவை மாநகர் பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. ரத்தினபுரி பகுதியில் சாக்கடை நீர் வீடுகளுக்குள் புகுந்தது.
முக்கியமாக, அவிநாசி சாலை மேம்பாலம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஓர் கார் மழை வெள்ளத்தில் தலைகீழாக மிதக்க தொடங்கியது. அதேபோல,
லங்கா கார்னர் சுரங்கப் பாதை அருகே ஓர் தனியார் பேருந்து மழை வெள்ளத்தில் சிக்கி பழுதாகிவிட்டது. கிக்கானி பள்ளி மேம்பாலத்தின் கீழும் ஓர் கார் மழை வெள்ளத்தில் மூழ்கியது.
காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகள் இணைந்து மழை நீர் வெள்ளத்தில் சிக்கிய நபர்கள் மற்றும் வாகனங்களை மீட்டனர். சுமார் 3 மணி நேரம் தொடர் கனமழை பெய்ததால் ராமநாதபுரம், உக்கடம், காந்திபுரம், லட்சுமி மில்ஸ், டவுன்ஹால், பீளமேடு, வடவள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் சாலை போன்ற முக்கிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு செய்தார்.