நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் இயக்குநர் ஹரியின் ‘யானை’ படம் மோதுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹரி இயக்கத்தில் முதன்முறையாக‘யானை’ படத்தில் நடித்து முடித்துள்ளார் அருண் விஜய். இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் நிறைவடைந்துள்ளது. யோகி பாபு, சினேகன், ராதிகா,கங்கை அமரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அருண் விஜய்க்கு அண்ணனாக சமுத்திரகனி, வில்லனாக ‘கேஜிஎஃப்’ புகழ் கருடா ராம் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில், சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்துடன் ஹரியின் ‘யானை’ படத்தை திரைக்கு கொண்டுவர இயக்குநர் ஹரி திட்டமிட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகிறது. அதே தேதியில்தான், ‘யானை’ படத்தையும் வெளியிட திட்டமிட்டுள்ளார் ஹரி. ஏற்கனவே, ஹரி இயக்கத்தில் சூர்யா ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’, ‘சிங்கம் 3’ படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இந்த நிலையில், சூர்யா படமும், ஹரி படமும் ஒரே நாளில் வெளியாகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது செம்ம போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.