தமிழ்ச் சினிமாவில் 51-வது வருடத்தை கொண்டாடுகிறார் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன். சமீபத்திய ‘ருத்ர தாண்டம்’ மூலம் தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியவருக்கு. ‘மாநாடு’ பெரிய வரவேற்பை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள் சொல்லி பேச்சை ஆரம்பித்தேன்.
நீங்க சினிமாவுக்கு வந்து 51 வருஷம் ஆச்சு.. இப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கீங்களே?
”நாடகத்துக்கு வந்து 60 வருஷம் ஆச்சு. 1960ல வந்தேன். 1970ல ‘நவக்கிரகம்’ படத்துல அறிமுகமானேன். இப்ப ஐம்பது வருஷத்தை தாண்டிட்டேன். சிவாஜி முதல் சிம்பு வரை நடிச்சாச்சு. இந்த ‘மாநாடு’ எனக்கு புதுத்தெம்பை கொடுத்திருக்கு. யோசிச்சு பார்த்தா அஞ்சாறு நாட்கள்தான் அதுல வேலை பாத்திருப்பேன். ஆனா, ஒரு திடமான ரோலா அமைஞ்சிடுச்சு.
கடந்த ரெண்டு வருஷமா நாடகங்கள் போட முடியல. அணையில தண்ணீர் திறந்துவிட்டது மாதிரி, ‘மாநாடு’ மூலம் கிடைச்சிருக்கு. அதுவும் 51 வருஷம் இப்படி ஒரு ஓப்பனிங் கிடைச்சிருக்கறது பெரிய சந்தோஷம். எந்த ஒரு பொருளுக்குமே எக்ஸ்பயரி தேதி இருக்கும். கலைக்கு எக்ஸ்பயரி டேட் கிடையாதுனு இந்த வெற்றி உணர்த்திருக்கு. இன்னிக்கு உள்ள இளைஞர்களும் என்னை ரசிக்கறாங்க. என்னோட பன்ச்சஸ் அவங்களுக்கும் பிடிக்குதுனு நினைக்கறப சந்தோஷமா இருக்கு.”
‘மாநாடு’ல நீங்க எப்படி?
”எனக்கு வெங்கட்பிரபுவை ரொம்ப பிடிக்கும். அவரோட ‘சரோஜா’வுல கூட ஒரு டார்க் காமெடி அசத்தும். அவரோட அப்பாவும் நானுமே நண்பர்கள். ஒண்ணா மியூசிக்கும் வாசிச்சிருக்கோம். தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சியை இருபது வருஷமா தெரியும். என்னை வச்சு ஸ்டார் ஷோஸ் பண்ணினவர் அவர். அவர்தான் என்னை வெங்கட்பிரபுகிட்ட சொல்லியிருக்கார். எஸ்.ஜே.சூர்யாவை இந்த படத்துல இருந்துதான் சந்திக்கறேன். ரொம்ப அருமையா பழகினார். சிம்புவை குழந்தையா இருக்கறப்பல இருந்து தெரியும். இதுல ஒரு ஆச்சரியம், இயக்குநர்ல இருந்து ஸ்டண்ட் மாஸ்டர் வரை படத்தோட கதையை முழுசா தெரிஞ்சு வச்சிருந்தாங்க. அதனாலதான் இப்படி ஒரு ஸ்கிரிப்ட் குழப்பமில்லாமல் தெளிவா ரீச் ஆகியிருக்கு. எங்க நாடகக்குழுவில நாங்க ஜாலியா இருந்த மாதிரி, இந்த டீம் இருந்துச்சு. நம்ம ஊர் எமோஷன், அரசியல்னு கனெக்ட் இருந்ததால படமும் வரவேற்பாகிடுச்சு.”
நாடகம் டு சினிமா.. அனுபவம் எப்படியிருக்கு…?
”நடிகன் என்பவன் பத்து வருஷத்துக்கு ஒருமுறை தன்னை புதுப்பிச்சிக்கணும்னு சொல்வாங்க. ‘மாநாடு’ல பண்ணின ரோலை, பத்து வருஷத்துக்கு முன்னாடி பண்ணியிருந்தால், வேற மாதிரி செய்திருப்பேன். என்னை புதுப்பிச்சுக்க நாடக அனுபவம் உதவுச்சு. நான் சினிமாவில் தான் இடைவெளிவிட்டு நடிச்சிட்டிருந்தேனே தவிர, நாடகங்களில் இடைவெளி விட்டுடல. நாடகங்கள் தொடர்ந்து நடிச்சிட்டிருந்தேன்.
என்ன சொல்றார் சிம்பு?
”சிம்புவோட ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’லேயும் நடிச்சிருந்தேன். அடுத்து இப்ப நடிக்கறேன். பெரியவங்களுக்கு ரொம்ப மரியாதை கொடுக்கறார். ரொம்ப நல்ல பையன். அவரை ஏன் அப்படி சொல்றாங்கனு புரியவே இல்ல. அந்த கால எஸ்.வி.ரங்காராவ் பத்தி கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்கிட்ட சொன்ன விஷயம் இது. ‘ரங்காராவ் ஷூட்டிங் வருவார். ஆனா, திடீர்னு வரமாட்டாராம். என்ன காரணம்னு யாருக்கும் தெரியாதாம். அதே மாதிரிதான், எல்லாரும் சொல்ற மாதிரி இல்ல சிம்பு. இந்த கால ஹீரோக்கள்கிட்ட இருக்கற ஒரே ஒரு பிரச்சினை. யாரும் போன்ல கிடைக்க மாட்டேன்றாங்க. போனையே எடுக்க மாட்டேன்றாங்க. . எங்க காலத்துல நான் வீட்ல டயல் செய்து எம்.ஜி.ஆர்கிட்ட பேசியிருக்கேன். சிவாஜி எடுப்பார். இந்த தலைமுறை ஹீரோக்களோட செகண்ட் அசிஸ்டெனோட மூணாவது அசிஸ்டென்ட் தான் போனை எடுக்கறாங்க.!”