உத்தரப்பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ் மாவட்டத்தில், 16 வயது சிறுமி, 10 வயது சிறுவன் உட்பட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. படுகொலை செய்யப்பட்டவர்கள் பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்தப் படுகொலைக்கு பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தான் காரணம் என்றும் கூறப்படுகிறது. மேலும், படுகொலைக்கு முன்னர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையிடம் இறந்தவர்களின் உறவினர்கள் புகார் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த வியாழக்கிழமை காலை, பிரயாக்ராஜ் பகுதியிலிருக்கும் ஒரு வீட்டில் மிகவும் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்ட நான்கு பேரின் உடல்களை காவல்துறையினர் கைப்பற்றினர். விசாரணையில், கோடரி போன்ற கூர்மையான ஆயுதத்தால் அவர்கள் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், அவர்களின் உடலில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக, 11 பேர்மீது கூட்டுப் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுடன் பிரயாக்ராஜ் காவலர்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருக்கின்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து ஊடகங்களிடம் பேசிய பிரயாக்ராஜ் காவல்துறை ஆய்வாளர் சர்வஸ்ரேஸ்தா திரிபாதி, “ நாங்கள் 11 பேர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். விசாரணைக்காகச் சிலரை காவலில் வைத்திருக்கிறோம். சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போம்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பிரயாக்ராஜ் பகுதிக்குச் சென்று, படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார்.
Also Read: 20 பேருக்கு முதல் டோஸ் கோவிஷீல்டு; இரண்டாவது கோவாக்சின்! – உத்தரப்பிரதேச அவலம்