நடிகர் சிலம்பரசன் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘மாநாடு’. இந்தப் படத்தை இயக்கி உள்ளவர் இயக்குனர் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தை தயாரித்துள்ளார். மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். ‘மாநாடு’ நாளை திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. 

image

இந்த நிலையில் அந்த படத்தை கொண்டாடும் விதமாக தயாராகிக் கொண்டிருந்தனர் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்கள். கடைசியாக அவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘ஈஸ்வரன்’. 2021 பொங்கல் திருநாளை முன்னிட்டு அந்தப் படம் வெளியாகி இருந்தது. 

தள்ளிப்போன வெளியீட்டு தேதி!

இந்த வருடம் மே 14-ஆம் தேதி ‘மாநாடு’ வெளியாகும் என சொல்லப்பட்டது. இருந்தும் போஸ்ட் புரோடக்ஷனில் ஏற்பட்ட தாமதம் காரணமாக பட வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. கொரோனா பொது முடக்கம் காரணமாக அது மேலும் தள்ளிப்போனது. இறுதியாக தீபாவளி அன்று படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அதுவும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி என பட வெளியீட்டுக்கு தேதி குறிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட் நடத்தப்பட்டது. அந்த நிகழ்வில் நடிகர் சிலம்பரசன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர். 

image

கண் கலங்கிய சிலம்பரசன்!

”ரொம்ப பிரச்னை கொடுக்கறாங்க… ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்னைகளை நான் பார்த்துக்கொள்கிறேன், என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்” என கண்ணீர்மல்க பேசி இருந்தார் சிலம்பரசன். 

image

கடைசி நேர குழப்பங்கள்!

நாளை படம் வெளியாக சில மணி நேரங்கள் மட்டுமே எஞ்சியிருந்த சூழலில் ”நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதன் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் ’மாநாடு’ வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன். ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார் மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி. 

இந்த செய்தி வைரலாக பரவியது. சமூக வலைதளங்களில் சிலம்பரசன் ரசிகர்கள் குரல் எழுப்பி இருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக சினிமா ஆர்வலர்களும் இணைந்துக் கொண்டனர். 

image

‘மாநாடு’ வெளியீடு தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிம்பு ரசிகர்கள் மதுரை தங்கரீகல் திரையரங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தயாநிதி அழகிரியின் ட்வீட்!

மாநாடு திரைப்படம் தள்ளிப்போவதாக அறிவிப்பு மாலை வெளியாகி இருந்த நிலையில், பின்னர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், நிச்சயம் திட்டமிட்டபடி படம் நாளை வெளியாகும் என்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதனிடையே முக்கிய பிரமுகர்கள் பலரும் இதுதொடர்பாக படம் வெளியாக வாய்ப்புள்ளது போன்ற தகவல்களை வெளியிட்டு வந்தனர்.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, “மாநாடு படத்தை பார்த்த நண்பர்களுடன் பேசி இருந்தேன். எல்லோருக்கும் நல்ல விருந்து இருக்கிறது என நினைக்கிறேன். சிலம்பரசன், வெங்கட் பிரபு மற்றும் படக் குழுவினருக்கு வாழ்த்துகள். திட்டமிட்டபடி திரைப்படம் சுமூகமாக நாளை வெளியாகும் என எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்திருந்தார். இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தகராகவும் உள்ளார். 

image

இந்த நிலையில் மாநாடு பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தரப்புக்கும், பைனான்ஸ் தரப்புக்கும் இடையே இருந்த சிக்கல் பேசி தீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் படம் நாளை வெளியாவது இப்போது உறுதியாகி உள்ளது. இயக்குநர் வெங்கட்பிரபுவும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ‘கடவுள் இருக்கார்’ என பதிவிட்டுள்ளார். இந்த ட்விட்டர் பதிவும் படம் வெளியாகும் என்பதை உறுதி செய்யும் வகையில் உள்ளது.

image


image

இருப்பினும், தயாரிப்பாளர், இயக்குநர் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.  “இருந்தாலும் தியேட்டரில் படம் வெளியானால் தான் அதை நம்புவோம்” என்பது சிலம்பரசன் ரசிகர்களின் மைண்ட் வாய்ஸாக உள்ளது. 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.