நேற்று மாலை மதுரையிலிருந்து திருப்பூர் செல்லும் அரசுப்பேருந்து, ஆரப்பாளையத்திலிருந்து கிளம்பி காளவாசல் சென்றது. அப்போது, போக்குவரத்து நெரிசல் காரணமாக பின்னால் ஒலி எழுப்பியபடி வந்த இனோவா வாகனத்துக்கு பேருந்து ஓட்டுநர் வழி கொடுக்காமல் பேருந்தை ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது.
அதனால், ஆத்திரமடைந்த இனோவா கார் ஓட்டுநர், அரசுப்பேருந்தை முந்திச்சென்று மறித்து நிறுத்தியிருக்கிறார்.
அதையடுத்து, வாகனத்திலிருந்து இறங்கிய கார் ஓட்டுநர், பேருந்தின் கண்ணாடியை உடைத்திருக்கிறார். பின்பு தகாத வார்த்தைகளால் திட்டியபடி பேருந்து ஓட்டுநரை கல்லாலும், இரும்பு கம்பியாலும் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதில் பேருந்து ஓட்டுனர் முத்துகிருஷ்ணனின் கைகளில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது.
இதனால் பேருந்திலிருந்த பயணிகள் பதற்றமடைந்தனர். அரசுப்பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து, அங்கு விரைந்த அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தாக்குதல் நடத்திய வாகனத்தில் வந்தவர்களை சுற்றிவளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால், அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து கிளம்பி விட்டனர். அதையடுத்து, தாக்குதல் சம்பவத்தை கண்டித்து போக்குவரத்துக்கழக ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தாக்கிய நபர்களை தேடிவந்தனர்.
இந்த நிலையில், தற்போது சிசிடிவி பதிவுகள் மூலம் இன்னோவாவின் பதிவெண்ணை கண்டுபிடித்து, அதை வைத்து தாக்குதல் நடத்திய ஓட்டுநர் சுரேஷ் என்பவரை கைது செய்திருக்கின்றனர். பேருந்து ஓட்டுநரை, கார் ஓட்டுநர் தாக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
Also Read: மதுரை: கொரோனா பணிக்குச் சென்ற மருத்துவர்மீது போலீஸ் தாக்குதல்! – விளக்கம் கேட்கும் மனித உரிமை ஆணையம்