புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியைச் சேர்ந்த 16 வயது சிறுமியுடன், புதுக்கோட்டை அருகே மரவாமதுரை பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(34) என்ற இளைஞர் நட்புடன் நெருங்கிப் பழகியுள்ளார். இந்த நிலையில், ஒரு நாள் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருத்து கலந்துகொடுத்து அவருக்குத் தெரியாமலே அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை காணொளியாக எடுத்து, அதனை வைத்துத் தொடர்ந்து சிறுமியை மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான், அந்தச் சிறுமி கர்ப்பமாகியிருக்கிறார். நாளடைவில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் ஏற்பட, பெற்றோர் சிறுமியிடம் விசாரித்த போது தான், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தகவல் சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்திருக்கிறது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை செய்த போது சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், கீரனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் அப்போது ஆய்வாளராக பணிபுரிந்த ஹேமலதா வழக்கு பதிந்து குற்றவாளி ராஜ்குமாரைக் கைது செய்தனர். கடந்த 2019 முதல் இந்த வழக்கானது புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராஜ்குமாருக்கு ஏற்கெனவே இரண்டு திருமணம் ஆகியிருக்கிறது. இதற்கிடையே தான், ராஜ்குமார் சிறுமிக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. அதோடு, தொடர்ந்து மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, கர்ப்பமாக இருப்பது தெரிந்து கருவைக் கலைக்கவும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி சத்யா, போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி இயற்கை மரணம் அடையும் வரை ஆயுள் தண்டனையும், ரூ.50ஆயிரம் அபராதமும் விதித்தார்.
அதனைக் கட்டத்தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதித்தார். அதோடு, இதர, பிரிவு 328ன் படி 10 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.20அபராதமும், இதனைக் கட்டத்தவறினால் மேலும் ஒரு வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. 506 பிரிவின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத்தவறினால் மேலும் 6 மாத தண்டனை அனுபவிக்க வேண்டும். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1,50,000 நிவாரணமும் வழங்க வேண்டும் என்று கூறி அதிரடி தீர்ப்பு வழங்கினார்.