நடிகர் அமிதாப்பச்சன் கமலா பசந்த் என்ற பான் மசாலா கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்திருந்தார். அமிதாப்பச்சன் நடித்த பான் மசாலா விளம்பரங்கள் டிவிகளில் ஒளிபரப்பப்பட்டு வந்தது. புகையிலை எதிர்ப்பாளர்கள் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த விளம்பர ஒப்பந்தத்திலிருந்து அமிதாப்பச்சன் விலக வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர். கடந்த செப்டம்பர் மாதம் டிவிகளில் ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தை அமிதாப்பச்சன் நியாயப்படுத்தியிருந்தார். ஆனால், இந்த விளம்பரத்தால் இளைய தலைமுறையினர் போதை பழக்கத்துக்கு அடிமையாகும் அபாயம் இருப்பதால், இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என்று தேசிய தொண்டு நிறுவனம் ஒன்று அமிதாப்பச்சனிடம் கேட்டுக்கொண்டது.
இதையடுத்து கடந்த மாதம் அமிதாப்பச்சன் கமலா பசந்த் பான் மசாலா கம்பெனியுடன் செய்து கொண்டிருந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, வாங்கிய பணத்தையும் திரும்பக் கொடுத்தார். அமிதாப்பச்சன் அலுவலகத்திலிருந்தும் இது தொடர்பாக முறைப்படி செய்தி வெளியிடப்பட்டது. தடை செய்யப்பட்ட சிகரெட், புகையிலை, போன்றவற்றை விளம்பரப்படுத்தும் வகையில் விளம்பரம் அமைந்ததால் அதிலிருந்து விலகுவதாக அமிதாப்பச்சனும் தெரிவித்திருந்தார். ஆனால், அமிதாப்பச்சன் ஒப்பந்தத்தை ரத்து செய்த பிறகும் தொடர்ந்து அந்த பான்மலாசா நிறுவனம் அமிதாப்பச்சன் நடித்த விளம்பரத்தை டிவியில் ஒளிபரப்பு செய்து வந்தது.
இது அமிதாப்பச்சனின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதையடுத்து, கமலா பசந்த் பான்மசாலா கம்பெனியிடம் விளக்கம் கேட்டு அமிதாப்பச்சன் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அமிதாப்பச்சன் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். புகையிலைப் பொருள்கள் பயன்பாட்டால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் சுமார் 10.35 லட்சம் பேர் உயிரிழப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனாலும் மக்கள் புகையிலை பொருள்களைத் தொடர்ந்து பயன்படுத்தித்தான் வருகின்றனர்.
Also Read: பிறந்தநாளன்று பான் மசாலா விளம்பரத்திலிருந்து வெளியேறிய அமிதாப் பச்சன்… ரசிகர்கள் வரவேற்பு!