சென்னை உயர் நீதிமன்றத்தின் 50-வது தலைமை நீதிபதியாக கடந்த ஜனவரி மாதம், 4-ம் தேதி சஞ்ஜிப் பானர்ஜி நியமிக்கப்பட்டார். வரும் 2023-ம் ஆண்டு, நவம்பர் மாதம் வரை சஞ்ஜிப் பானர்ஜியின் பணிக்காலம் இருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்ச நீதிமன்றக் கொலிஜியம் குழுக் கூட்டத்தில், நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப் பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றவும் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரைகளை ஏற்று, நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரியை, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றியும் குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பணியிடமாற்றத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கொலிஜியத்துக்குக் கோரிக்கை வைத்திருந்த நிலையிலும் சஞ்ஜிப் பானர்ஜி மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: ` சொல்லாமல் விடைபெற்றுச் சென்றதற்கு மன்னியுங்கள்!’ – நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி உருக்கமான கடிதம்
முனீஷ்வர்நாத் பண்டாரி 1960-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ம் தேதி மகாராஷ்டிராவில் பிறந்தவர். தனது பி.காம்., எல்.எல்.பி. படிப்பை முடித்த முனீஷ்வர்நாத், கடந்த 1983-ம் ஆண்டு மே 29-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். இவர் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில், சிவில், சேவை, தொழிலாளர், குற்றவியல், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றில் அரசமைப்பு போன்ற வழக்குகளில் வாதாடியுள்ளார். மேலும், இவர் ராஜஸ்தான் அரசின் வழக்கறிஞராகவும், ரயில்வே வழக்கறிஞராகவும், அணுசக்தித் துறையின் வழக்கறிஞராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜராகி வாதாடியுள்ளார்.
முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும். 2008-ம் ஆண்டு நவம்பர் 4-ம் தேதி, நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றிய முனீஷ்வர்நாத் 2019-ம் ஆண்டு மார்ச் 15-ம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் யாதவ் ஓய்வு பெற்றதையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை 26-ம் தேதி முதல் அக்டோபர் 10-ம் தேதி வரை முனீஷ்வர்நாத் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகித்தார்.
Also Read: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்ற விவகாரம்: மறு ஆய்வு கோரும் வழக்கறிஞர்கள்! -நடப்பது என்ன?
நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பணிக்காலம் வரும் 2022-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதியோடு முடிவடைகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய நீதிபதி பதவியேற்கும் வரை, தலைமை நீதிபதியாக துரைசாமி பொறுப்பு வகிப்பார் என்று குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என் ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார். ராஜ் பவனில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.