கோவை 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமையால் தற்கொலை செய்த அதிர்ச்சி இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அடுத்த சம்பவம் நடந்துள்ளது. கோவை அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியராக இருப்பவர் ரகுநாதன். இவர், மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவரை தனது அறைக்கு அழைத்து பேசியுள்ளார்.
Also Read: “இது தற்கொலை அல்ல… நிர்வாக கொலை!” – ‘சின்மயா’ மாணவி மரணம்… கொந்தளிக்கும் கோவை
அப்போது, “ஏன் என் கண்ணை பார்த்து பேச மாட்டேன் என்கிறாய்” என கூறி மாணவியிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். உடனடியாக, மாணவி ரகுநாதனை எச்சரித்து அறையிலிருந்து வெளியேறியுள்ளார்.
அதன்பிறகும் கூட, ரகுநாதன் தனது நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. மாணவியை சந்திக்கும்போது, “உன்னை தூக்கி சென்று கல்யாணம் செய்து விடுவேன்” என்றும் தெரிவித்துள்ளாராம். மேலும், இந்த விஷயத்தை யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன்,” என்றும் மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
முக்கியமாக, மாணவிக்கு வாட்ஸப்பில் தொடர்ந்து அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ரகுநாதன்.
கொரோனா காரணமாக மாணவியால் இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை. கொரோனா, ஊரடங்கு முடிந்து கல்லூரி திறந்தவுடன் சக மாணவர்களிடம் ரகுநாதன் குறித்து கூறியுள்ளார். அப்போது ரகுநாதன், இதே மாதிரி மேலும் சில மாணவிகளிடம் அத்துமீறியது தெரியவந்தது.
இதனால்,பாதிக்கப்பட்ட மாணவி ரேஸ்கோர்ஸ் போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில், வழக்கு பதிந்து, போலீஸார் பேராசிரியர் ரகுநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.