நடிகர் பிரபாஸ் தனது ரசிகர் ஒருவருக்கு ஆடம்பர கடிகாரத்தை அன்புப் பரிசாக அளித்து அசத்தியிருக்கிறார். இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கிறது.
திரைப்படங்களையும், அதன் நாயகர்களையும் கொண்டாடுவதில் தெலுங்கு ரசிகர்களுக்கு இணை யாரும் கிடையாது. அந்த காலத்தில் சென்னையில் வசித்து வந்த தெலுங்கு சினிமா நட்சத்திரங்களைக் காண, திருப்பதி வரும் ஆந்திர மக்கள் அப்படியே சென்னை வந்து காத்துக் கிடந்த வரலாறும் உண்டு. இதேபோல், தெய்வ கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாகிய ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவை கடைசி வரை அம்மக்களில் சிலர் தெய்வமாகவே வழிபட்ட நிகழ்வுகளும் இருக்கின்றன. திரை நாயகர்களின் மேல் இருக்கும் இந்த பாசம் இப்போதும் ஆந்திர மக்களிடையே குறையாமல் இருக்கிறது.
இதற்கு சமீபத்திய உதாரணம் பிரபாஸ் ரசிகர் ஒருவர். சில நாட்களுக்கு முன் வெறித்தமான ரசிகர் ஒருவர் தனது தலைமுடியில் பிரபாஸின் பெயரை பொறித்து, அதை புகைப்படமாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இது வைரலாக பரவியது. இறுதியாக பிரபாஸையும் இந்தப் படம் சென்றுள்ளது. தனது ரசிகரின் வெறித்தனமான அன்பை அறிந்த நடிகர் பிரபாஸ் அந்த ரசிகர்களை தனது வீட்டிற்கு வரவழைத்து பேசியிருக்கிறார்.
மேலும், ரசிகருக்கு தனது ஆடம்பர கடிகாரம் ஒன்றையும் பரிசாக கொடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இப்போது மீண்டும் வைரலாகி வருகின்றன. சில நாட்கள் முன்புதான் பிரபாஸ் நடித்து வரும் `ராதே ஷியாம்’ படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை மிரட்டல் கடிதம் எழுதி அனுப்பியது பதற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.