இந்தியாவில் விவசாயம் சார்ந்த புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஒவ்வொர் ஆண்டும் 22,000 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்படுகிறது. ஆனால், அதில் 4 முதல் 5% வரை மட்டுமே வளம் குன்றா வேளாண்மைக்கு வழிவகை செய்கின்றன. இந்த கண்டுபிடிப்புகளுக்காக செய்யப்படும் முதலீட்டில் அரசும், தனியார் நிறுவனங்களும், பல முதலீட்டாளர்களின் முதலீடும் அடங்கும் . ஆனால், இதை தனிநபருக்கான முதலீட்டு அளவில் கணக்கிட்டால், தலா 200 ரூபாய்தான் செலவிடப்படுகிறதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
Also Read: `ஆரோக்கியம் மட்டுமல்ல, சுறுசுறுப்பும்கூட!’ – மாயம் செய்யும் மாயன் கீரை; அப்படி என்ன ஸ்பெஷல்?
2050-ம் ஆண்டிற்குள் இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடியை எட்டிவிடும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் உணவு தேவையைப் பூர்த்தி செய்ய, உணவு உற்பத்தியை இரட்டிப்பாக்குவது அவசியமாகிறது. ஆனால், இந்த இலக்கை அடைய, தண்ணீர் பற்றாக்குறை, பல்லுயிர் இழப்புகள், கரிமவாயு வெளியேற்றம் போன்ற பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று வளம் குன்றா வேளாண்மை ஆணையத்துடன் இணைந்து டல்பெர்க் ஆலோசனை அமைப்பு நடத்திய ஆய்வு முடிவு குறிப்பிட்டுள்ளது.
உணவு உற்பத்தி முறையில் தேவையான மாற்றங்களை கொண்டு வந்து, இயற்கை, மனித மற்றும் சமூக வளம் குன்றாமல் செய்யும் வேளாண்மை முறையை கடைபிடித்தால்தான் மேற்கூறப்பட்ட சிக்கல்களைச் சந்தித்து இந்தியா தனது இலக்கை அடைய முடியும். எனவே, சுற்றுச்சூழல் நலனையும், சத்தான உணவை உற்பத்தி செய்ய வேண்டியதையும் கருத்தில் கொண்டு, வளம் குன்றா வேளாண்மையில் முதலீடு செய்ய வேண்டியது அவசியமாகிறது. ஆனால், இதுவரை செய்யப்பட்ட முதலீட்டில் 4% மட்டுமே வளம் குன்றா வேளாண்மைக்கு வழிவகை செய்துள்ளது.
Also Read: நடவு முதல் அரிசி வரை; தஞ்சாவூரில் திறக்கப்பட்ட இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம்!
மண் வள பாதுகாப்பு, வளம் குன்றா நீர் பாதுகாப்பு, மற்ற இயற்கை வளப்பாதுகாப்பில் இதுவரை போதுமான முதலீடு செய்யப்படாமல் உள்ளது. எனவே, இதில் கவனம் செலுத்துவது இலக்கை அடைய எடுத்துவைக்கும் முதல்படியாக அமையும்.
“பொதுவாக புதுமை சார்ந்த கண்டுபிடிப்பில் செய்யப்படும் முதலீடுகள் இயற்கையின் அழிவைப் பற்றி சிந்திக்கத் தவறுகின்றன. ஆனால், இதே தவறை நாம் மேலும் செய்யாமல் இருக்க வேண்டும்” என்று வளம் குன்றா வேளாண்மை ஆணையத்தின் ஆணையர் வரபிரசாத் கூறியுள்ளார்.
– ஜனனி ரமேஷ்