காற்று மாசுபாட்டை குறைப்பதில் அரசின் அதிகாரத்துவம் செயலற்ற நிலைக்கு சென்று விட்டது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

தலைநகர் டெல்லியில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான வழக்கை விசாரிக்கும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மத்திய அரசு, டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் மாநில அரசுகளுக்கு சரமாரியான பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இதுகுறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “டெல்லியில் காற்று மாசுபாட்டை குறைப்பதில் அதிகாரத்துவம் முழுமையாக தோல்வி அடைந்து விட்டது. இந்த விஷயத்தில் அவர்கள் எதையும் செய்வதற்கு முன்வரவில்லை. வாகனங்களை நிறுத்துவது, தண்ணீர் தெளிப்பது போன்றவற்றை தான் அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் அவர்களது நிர்வாகத்தின் வெளிப்பாடு. இது வெறும் அக்கறையின்மையின் வெளிப்பாடு மட்டும்தான்” என கடுமையாக குறை கூறினார்.

image

அமர்வில் உள்ள மற்றொரு நீதிபதியான சூரியகாந்த், “டெல்லியில் நிலவும் காற்று மாசுபாட்டிற்கு வாகனங்கள்தான் முக்கிய காரணம் எனக் கூறுகிறீர்கள். தலைநகர் டெல்லியில் ஓடும் அதிக அளவில் மாசினை வெளிப்படுத்தக்கூடிய அதிநவீன கார்கள் யாரால் இயக்கப்படுகிறது என்பது அனைவருக்கும் புரியும். ஆனால் அதனை தடுத்து நிறுத்த ஏன் முன்வரவில்லை என்பதுதான் எங்களது கேள்வி” என வினவினார்.

அதற்கு பதிலளித்த மத்திய அரசின்  வழக்கறிஞர் “வரும் நவம்பர் 23-ஆம் தேதிக்குள் அதிக அளவில் காற்று வீசுவதால் டெல்லியில் காற்று மாசுபாடு குறையும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது” எனச் சுட்டிக்காட்டினார். அப்போது குறுக்கிட்ட மற்றொரு நீதிபதியான சந்திரசூட், அப்பொழுதும் இயற்கையாக வந்து உங்களை காப்பாற்றும் என காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என சாடினார்.

இதேபோல ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேச அரசுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருந்தனர்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.