திருச்சியில் உணவுப் பிரியர்களிடம் மட்டனில் நல்ல தம் பிரியாணியை வீட்டுமுறையில் ருசியாகச் சாப்பிட வேண்டும் என்று கேட்டால் அவர்கள் குறிப்பிடும் உணவகங்களின் லிஸ்ட்டில் கண்டிப்பாக கேகே நகரிலுள்ள கதிர் டேஸ்டி பிரியாணி இடம்பிடித்துவிடுகிறது. இயக்குநர் ஷங்கர் குடும்பத்துடன் தேடிவந்து சாப்பிட்ட உணவகம் இது என்பதையும், நடிகர் சிவகார்த்திகேயன் திருச்சி வரும் சமயங்களில் இவர்களின் பிரியாணியைக் கண்டிப்பாகச் சாப்பிடுவார் என்பதையும் கேள்விப்பட்டவுடன் ஒரு மாலை நேரமாக அங்கே கிளம்பினோம்.

கதிர் டேஸ்டி பிரியாணி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து கதிர் டேஸ்டி பிரியாணி உணவகத்திற்கு 15 நிமிடங்களில் சென்றுவிடலாம். சிறிய சந்தில் வீடு போன்ற அமைப்பில் அமைந்துள்ளது கதிர் டேஸ்டி பிரியாணி என்னும் இந்த உணவகம். நாம் சென்றபோது மாலை நான்கு மணியாகியிருந்தது. ஆனாலும் உணவகத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை சிறிது அதிகமாகவே இருந்தது. நாம் ஒரு மேசையைப் பிடித்து அமர்ந்து சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு மட்டன் பிரியாணியும், மூளை வறுவலும், ஈரலும் ஆர்டர் செய்தோம்.

மட்டன் பிரியாணி
மட்டன் பிரியாணி

சில நிமிட காத்திருப்பிற்குப் பின் நமது மேசைக்கு வந்த பிரியாணியின் வாசம் உடனே சாப்பிடச் சொல்லி மூளைக்குச் செய்தி அனுப்ப, நம் முன்னே பரப்பி வைக்கப்பட்டிருந்த வாழையிலையில் பிரியாணியைப் பரப்பினோம். சீரகச்சம்பா அரிசியில், மட்டன் துண்டுகள் நிரம்பிய ஓர் அருமையான பிரியாணி. வாழையிலையில் ஆவி பறக்கக் கிடந்த பிரியாணியை தயிர் பச்சடி, தால்ச்சாவுடன் சேர்த்து சாப்பிட, சொர்க்கமாக இருந்தது. காரம் அதிகமாக இல்லாமல், மசாலாக்கள் பெரிதாகச் சேர்க்காமல் தம் வைத்து எடுக்கப்பட்ட பிரியாணி அப்படியே வீட்டில் நாம் சமைத்துச் சாப்பிடும் பிரியாணியை ஞாபகப்படுத்தியது. கூடவே நல்ல சுத்தமாக செய்த மட்டன் மூளை வறுவலும் வெங்காயம், மிளகுடன் சூடாக சாப்பிட வேறு விதமான அனுபவத்தைக் கொடுத்தது.

தொடர்ந்து ஈரல் பிரை சாப்பிட, அருகிலிருந்தவர்கள் செட்டிநாடு சிக்கன் ட்ரை பண்ணுங்க நல்லாருக்கும் எனக் கூறவும், அதையும் ஆர்டர் செய்தோம். இதுவும் வீட்டு சுவையில் சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு சாப்பிட சுவையாக இருந்தது. மேலும் விறகடுப்பில் இவர்கள் போட்டுத் தந்த ‘கரண்டி முட்டை’ பிரமாதம். தொடர்ந்து சாப்பிட்டுவிட்டு அதற்குரிய தொகையைச் செலுத்தியபின், உணவகத்தின் உரிமையாளரான கதிரிடம் பேசினோம்.

உரிமையாளர் கதிர்

”2008ல ஆரம்பிச்சது இந்த உணவகம், எனக்குச் சொந்த ஊர் இங்க ஊருக்குள்ள இருக்குற அயிலாபேட்டை கிராமம். எங்க குடும்பம் ஒரு சராசரி விவசாயக் குடும்பம்தான், குடும்பத்தைப் பொறுத்தவரை உணவுக்கும் அவர்களும் பெருசா எந்த சம்பந்தமும் இல்ல. நான் ஐ.டி.ஐ படிச்சிருக்கேன், படிச்சி முடிச்சதும் என் உறவினர் ஒருத்தர் நடத்துற உணவகத்துல வேலை பாத்துட்டிருந்தேன்.

கதிர் டேஸ்டி பிரியாணி
கதிர் டேஸ்டி பிரியாணி

தொடர்ந்து அங்க இருந்து சில சமையல் நுணுக்கங்கள் கத்துக்கிட்டு, என்னோட உழைப்பையும் போட்டு நானும் என் அப்பாவும் சேர்ந்து சின்னதா ஒரு தள்ளுவண்டிக் கடையா இந்த கதிர் டேஸ்டி பிரியாணியை ஆரம்பிச்சோம். மக்கள்கிட்ட ரொம்பவே நல்ல பேர் எடுத்திடுச்சு எங்க கடை பிரியாணி. அப்புறம் கொஞ்சம் விரிவுபடுத்தலாம்னு வாடகைக்கு ஒரு இடத்துல வச்சிருந்தோம். அப்புறம் அஞ்சு வருசத்துக்கு முன்னாடிதான் இந்த இடத்துக்கு வந்தோம்.

Also Read: திருச்சி ருசி: பக்குவமான சுவைக்கு ‘பாட்சா பிரியாணி!’ சேரர்; சோழர்; பாண்டியர் பெயர்களில் குடில்கள்!

பெருசா மசாலா சேர்க்க மாட்டோம். கொஞ்சமா சேர்க்குற மசாலாவும் வீட்ல இருந்து நாங்களே அன்னன்னைக்கு ரெடி பண்ணிடுவோம். நெய்க்கு வெண்ணெய் வாங்கிக் காய்ச்சிடுவோம். அரிசியெல்லாம் பார்த்தீங்கன்னா, துறையூர் பக்கத்துல இருக்குற கோபம்பட்டில இருந்துதான் எப்போதுமே எடுக்குறது. முக்கியமா விறகடுப்புலதான் சமைக்குறது. அதான் இவ்ளோ டேஸ்டுக்கு காரணம். ஆரம்பிச்சதுல இருந்து இப்போ வரை நானும் எங்க அப்பாவும் மட்டும்தான் பிரியாணி செய்வோம் அதும் ஒரு காரணம்.

கதிர் டேஸ்டி பிரியாணி
கதிர் டேஸ்டி பிரியாணி
கதிர் டேஸ்டி பிரியாணி

ஆடு எப்போதுமே பண்ணையில சொல்லி வச்சு தினமும் கொடுக்குற மாதிரி பாத்துப்போம். காலையில வைக்கிற தம் பிரியாணி தீரத் தீர தம் வச்சிட்டுதான் இருப்போம். அதேமாதிரி கரண்டி முட்டையை கேஸ் அடுப்புல செஞ்சா உடனே செஞ்சிடலாம். ஆனா, விறகடுப்புல செய்யும்போது டெஸ்ட் நல்லா இருக்கும்னு நேரம் ஆனாலும் பரவால்லன்னு செஞ்சு கொடுக்குறோம். பணியாளர்கள் உழைப்பும், அவங்க கஸ்டமரை உபசரிக்குற விதமும் வாடிக்கையாளர்கள் வரதுக்கு ரொம்பவே உதவியா இருக்கு. ஆரம்பத்துல சந்துக்குள்ள வைக்கிறோம்னு ஒரு தயக்கம் இருந்தது. ஆனா எங்க வாடிக்கையாளர்கள் அந்தத் தயக்கத்தை உடைச்சிட்டாங்க” என்கிறார்.

ஆரம்பத்தில் தன் தந்தையின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த உணவகத்தில் தற்போது 15 பேர் வரை பணிபுரிகின்றனர். பிரபலங்கள் பலருக்கும் இவர்களின் பிரியாணி என்றால் இஷ்டம். குறிப்பாக இயக்குநர் ஷங்கர் அவர்கள் குடும்பத்தினருடன் இங்கு வந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயனுக்கு திருச்சி வந்தால் இவர்களின் பிரியாணிதான் பல நேரங்களில் உணவு.

கதிர் டேஸ்டி பிரியாணி

தொடர்ந்து கதிர் உணவகத்தின் வாடிக்கையாளரான கிருஷ்ணா அவர்களிடம் பேசினோம்.

”பெருசா நாங்க விரும்பிச் சாப்பிடுற சாப்பாட்டுல பிரியாணிதான் மொத இடத்துல இருக்கும். அதும் இவங்க கடை பிரியாணி ரொம்ப சூப்பரா இருக்கும். சிக்கன், மட்டன் என எது வாங்குனாலும், அதோட கடைசி வாய் பிரியாணி சாப்பிடற வரைக்கும் கறி இருக்கும். வீட்டுக்கு வாங்கிட்டுப் போனா குழந்தைகளுக்கு ரொம்பவே புடிச்சிடும். சாப்பிட்டா உடம்புக்கு எந்தப் பிரச்னையும் வராது. விலையும் கரெக்டா இருக்கும்” எனக் கூறினார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.