கோவை சின்மயா வித்யாலயா பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது செய்யப்பட்டார். பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் வலுத்து வருகிறது.
Also Read: கோவை: பள்ளியைவிட்டு விலகியும் டார்ச்சர்; மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
போராட்டம் நடத்தி வரும் உறவினர்கள், நண்பர்கள், அமைப்பினரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், “ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியை நேற்றே கைது செய்து சிறையில் அடைத்துவிட்டோம். தொடர்ந்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறோம். அந்த வகையில், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்காததால், பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மீரா ஜாக்சன் தலைமறைவு ஆகியுள்ளார். இரண்டு குழுக்கள் அமைத்து அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த வகையில், சரியான விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவி எழுதி வைத்த கடிதம் குறித்து ஆராய்ந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.” என்றார்.
முதல்வர் மீரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.