கோவை மாணவி தற்கொலை விவகாரத்தில் முக்கிய ஆதாரமாக கருதப்படுவது அவர் எழுதி வைத்த கடிதம் தான். அந்த கடிதத்தில், “யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தா ஓட தாத்தா. எலிசா சாரு ஓட அப்பா. இந்த சார் ***** (கெட்ட வார்த்தை). யாரையும் விடக் கூடாது.” என்று முடிகிறது.
Also Read: `பழிபோட்ட ஆசிரியர்.. கண்டு கொள்ளாத பள்ளி?!’ – கோவை மாணவி தற்கொலையின் அதிர்ச்சி பின்னணி
வேறு கூடுதல் தகவல் எதுவும் கடிதத்தில் இல்லை. அந்த கடிதத்தில் மூன்றாவதாக குறிப்பிட்டிருப்பது, மாணவி படித்து வந்த சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்று தகவல் வெளியானது.
மிதுன் சக்கரவர்த்தி மீது மாணவியின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் வெளிப்படையாக குற்றம் சாட்டியிருந்தனர். மேலும் மிதுன் – மாணவி வாட்ஸ்அப் உரையாடலும் வெளியாகியிருந்தது. அதில் மாணவிக்கு மிதுன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகியது.
இதையடுத்து, மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து கைது செய்தனர். ஆனால், கடித்தில் உள்ள மற்ற இரண்டு பேர் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்களிடம் விசாரித்தோம்.
“அது யார் என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் வாடகை வீடு தான். பல வீடுகள் மாறிவிட்டோம். அதனால், எங்களுக்கு அதில் இருக்கும் பெயர்கள் தெரியவில்லை.” என்கின்றனர் பெற்றோர். மற்ற இரண்டு சம்பவங்கள் மாணவி 6-ம் வகுப்பு படிக்கும்போது நடந்திருக்க வாய்ப்புள்ளது. அது அவர் தோழிகளின் தந்தை மற்றும் தாத்தவாக இருக்கலாம் என்கின்றனர் உறவினர்கள்.
“இருப்பினும், மிதுன் சக்கரவர்த்தி தான் உடல்ரீதியாக நேரடியாக வன்கொடுமை செய்துள்ளார். அதனால்தான் மிதுன் சக்கரவர்த்தி மீது அவர் அதிக கோபத்துடன் இருந்தார்.
அந்த சம்பவத்துக்கு பிறகு அவருக்கு ஆண்களை பார்த்தாலே அருவருப்பு ஆகிவிட்டது. மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். ஒருமுறை கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். எனவே, இந்த சம்பவத்துக்கு பிறகு சிறு வயதில் நடந்த சம்பவங்களையும் மனதில் யோசித்து பாதிக்கப்பட்டிருக்கலாம்.
அதனால், அவர்கள் பெயரையும் குறிப்பிட்டிருக்கலாம்.” என்று நண்பர்கள் கூறுகின்றனர். ஆனால் சில உறவினர்களும் நண்பர்களும் அந்த கடிதத்தை மாணவி எழுதியிருக்க வாய்ப்பு குறைவு என்றும் சொல்கின்றனர்.
அதில் கெட்டவார்த்தை இடம் பெற்றிருப்பதால் மாணவி அதை எழுதியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு என்று கூறுகின்றனர். காவல்துறையின் முதல் தகவல் அறிக்கையிலும் கூட மாணவியின் அந்த கடிதத்தைப் பற்றி குறிப்பிடாமல் தவிர்த்துள்ளனர்.
இதனால், காவல்துறை அந்த இருவரை காப்பாற்ற முயற்சி செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, “அந்த கடிதம் எழுதியது மாணவி தானா என்பது உறுதியாகவில்லை.
மாணவியின் பெயர் அதில் இல்லை. அது அவரின் கையெழுத்து தானா என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம். அந்த கடிதத்தில் மிதுன் சக்கரவர்த்தியின் பெயர் கூட நேரடியாக குறிப்பிடப்படவில்லை. மாணவியின் பெற்றோர் மிதுன் சக்கரவர்த்தி மீது புகார் கொடுத்தனர். விசாரணையில் மிதுன் சக்கரவர்த்தி மீதான புகாருக்கு ஆதாரங்கள் கிடைத்தன.
அதுபோன்ற ஆதாரங்கள் மற்ற இரண்டு பேர் குறித்து கிடைக்கவில்லை. அவர்கள் யார் என்பது குறித்தும் நாங்கள் விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த வழக்கில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றனர்.
மாணவி புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்காமல், பெற்றோரிடம் கூட விஷயத்தை மறைத்த சின்மயா வித்யாலயா பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டங்கள் வலுத்து வருகிறது.
இந்நிலையில், கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸார், ஆர்.எஸ்.புரம் சின்மயா வித்யாலயா மெட்ரிகுலேசன் பள்ளியில் விசாரணை நடத்தினர். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.