தருமபுரி மாவட்டத்தில் ரயில் தடம் புரண்டு விபத்து!
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே கேரளாவிலிருந்து கர்நாடகா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. சிவடி ரயில் நிலையத்துக்கும் முட்டாம்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே விபத்து நடந்திருக்கிறது. கேரள மாநிலம் கண்ணூரிலிருந்து கர்நாடகா மாநிலம், பெங்களூருக்குச் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலின் மூன்றாம் வகுப்பு ஏசி கோச் மற்றும் இரண்டாம் படுக்கை வசதி கொண்ட ஐந்து கோச்சுகள் இன்று அதிகாலை 3:50 மணிக்கு தடம்புரண்டன. விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. லேசான காயம்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். பெங்களூரு கோட்ட ரயில்வே அதிகாரிகளும், சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
– ஆர்.பி.
மழை, மழை பாதிப்பு காரணமாக விடுமுறை!
தமிழகத்தில் பருவமழை பரவலாகப் பெய்துவருகிறது. வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த இரு நாள்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இந்த நிலையில் மழை காரணமாகவும், மழை பாதிப்பு காரணமாகவும் தருமபுரி (1-8-ம் வகுப்பு வரை மட்டும்), கன்னியாகுமரி, சென்னை, கடலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம் உள்ளிட 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மரம் விழுந்து குன்னூரில் அரசுப்பள்ளி ஆசிரியை உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வண்டிச்சோலை தொடக்கப்பள்ளி ஆசிரியை மகேஷ்வரி, நேற்று மாலை பள்ளியை முடித்துவிட்டு வீடு திரும்புகையில் தலையில் மரம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். நீலகிரியில் இடி, மின்னலுடன் அதிக மழைப்பொழிவு இருக்கும் என எச்சரிக்கப்பட்டிருப்பதால் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.