அண்மையில் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதைப் பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத், அடிக்கடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைக் கூறி, பரபரப்பை ஏற்படுத்தக்கூடியவர். கங்கனாவின் சர்ச்சைக் கருத்துகள் காரணமாக, ட்விட்டர் நிறுவனம் அவரின் டிவிட்டர் கணக்கை நிரந்தரமாக முடக்கிவிட்டது. முன்னதாக, “தீபாவளிக்குப் பட்டாசு வெடிக்கக் கூடாது என்று சொல்பவர்கள் அலுவலகங்களுக்கு நடந்து செல்ல வேண்டும்” என்று அவர் கருத்து தெரிவித்திருந்தது, விவாதத்துக்குள்ளானது. இந்த நிலையில், கங்கனா ரணாவத் மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருக்கிறார்.
இந்தியா சுதந்திரம் அடைந்தது குறித்து சர்ச்சைக்குரிய வகையில், கங்கனா பேசிய 24 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அந்த சர்ச்சை வீடியோவினை பாஜக எம்.பி மேகனா காந்தியின் மகன் வருண் காந்தி தன் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அந்த வீடியோவில் கங்கனா ரணாவத், “நாடு உண்மையிலேயே 2014-ம் ஆண்டுதான் சுதந்திரம் அடைந்தது. 1947-ம் ஆண்டு கிடைத்தது சுதந்திரம் அல்ல. அது பிச்சை. பிச்சையாகக் கிடைத்ததை நாம் சுதந்திரமாக ஏற்க முடியுமா” என்றும் பேசியிருந்தார்.
டிவி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கங்கனா இப்படி பேசியிருக்கிறார் என்று தெரியவந்திருக்கிறது. இந்த வீடியோவை பகிர்ந்திருக்கும் வருண் காந்தி, “கங்கனாவின் கருத்து தேச விரோத செயல். சுதந்திரப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்தவர்களை இப்படி இழிவுபடுத்தக்கூடாது. அவர்களை மக்கள் ஒருபோதும் மறக்கக் கூடாது” என்று கங்கனாவை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
அதேபோல, கங்கனா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி கோரிக்கை விடுத்திருக்கிறது. அக்கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் பிரீத்தி மேனன், முறைப்படி கங்கனா மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறி புகார் கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக, கருத்து தெரிவித்திருக்கும் பிரீத்தி மேனன், கங்கனாவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சியும் கங்கனாவின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மேலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் பத்மஸ்ரீ விருதைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் அக்கட்சி மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்திருக்கிறது.
அரசியல் கட்சியினரைத் தாண்டி, சமூக செயற்பாட்டாளர்கள், விடுதலை போராட்ட வீரர்கள் என பல்வேறு தரப்பினரும் கங்கனாவின் இந்த சர்ச்சை கருத்துக்கு தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றனர்.
Also Read: கங்கனா ரணாவத்: `அடுத்தமுறை ஆஜராகாவிட்டால் கைது வாரன்ட்!’ – மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை