விக்ரமின் ‘கோப்ரா’ இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்குகிறது என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
அருள்நிதி நடிப்பில் வெளியான ’டிமாண்டி காலனி’, நயன்தாரா நடிப்பில் வெளியான ’இமைக்கா நொடிகள்’ ஆகிய வெற்றிப் படங்களின் இயக்குநர் அஜய் ஞானமுத்துவின் ‘கோப்ரா’ படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விக்ரம். விக்ரமிற்கு ஜோடியாக ’கேஜிஎஃப்’ பட புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்க, விக்ரம் பல்வேறு கெட்டப்புகளில் நடிப்பதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இவை எல்லாவற்றையும் விட பெரிய எதிர்பார்ப்பு என்னவென்றால், விக்ரமுக்கு வில்லனாக கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நடித்திருக்கிறார் என்பதுதான்.
சென்னை மற்றும் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட இப்படத்தினை ’மாஸ்டர்’ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த நிலையில் விக்ரம்- இர்பான் பதானுக்கான காட்சிகளை படமாக்க மீண்டும் ரஷ்யாவுக்கு செல்ல திட்டமிட்டுள்ளது படக்குழு. 15 நாட்கள் நடக்கும் இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவுள்ளது. இதனிடையே, இர்பான் பதான் டி20 கிரிக்கெட்டில் பிசியாகவும், விக்ரம் ‘மகான்’, ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் பிசியாக இருந்ததாலும் காத்திருந்திருக்கிறது படக்குழு.