தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம் அருகே உள்ள பச்சக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அபிராமி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அவரது கணவர் சம்பத்குமார். இவர் அம்மாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் மணல் திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீது மணல் திருடியது தொடர்பாக ஒன்பது வழக்குகள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டரான தன் மனைவி அபிராமி பெயரை பயன்படுத்தி சம்பத்குமார் தொடர்ச்சியாக மணல் திருட்டில் ஈடுப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்குப் புகார் சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து எஸ்.பி ரவளி பிரியா சம்பத்குமாரை கைது செய்யவதற்காக தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிறப்பு தனிப்படை எஸ்.ஐ முத்துக்குமார், சம்பத்குமாரை கைது செய்திருக்கிறார். சப்இன்ஸ்பெக்டரின் கணவர் மணல் திருட்டில் கைது செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் பேசினோம், “அம்மாப் பேட்டை பகுதிகளில் உள்ள ஆறுகளில் சம்பத்குமார் மணல் திருட்டில் ஈடுபட்டு வந்தார். இது தொடர்பாக அம்மாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அவருக்கு சாதகமாக சில போலீஸார் செயல்பட்டதால் சம்பத்குமார் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வந்த அவரது மனைவி அபிராமி தமிழ்பல்கலைக்கழகம் காவல் நிலையத்திற்கு இடம் மாறுதல் பெற்று பணியில் சேர்ந்தார். அதன் பிறகு சம்பத்குமார் மணல் திருட்டில் ஈடுபடுவது அதிகரித்தது. அத்துடன் வருவாய் துறை உள்ளிட்டோருக்கு போன் செய்யும் சம்பத்குமார் நான் இன்ஸ்பெக்டரோட கணவர் பேசுறேனு சொல்லி பல காரியங்களை சாதித்து வந்திருக்கிறார். அபிராமி சப்-இன்ஸ்பெக்டர்தான் ஆனால் இன்ஸ்பெக்டர் என சொல்லியே பேசி வந்திருக்கிறார்.
Also Read: `கல்லணை தலைப்பிலேயே மணல் திருட்டு; துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டும்!’ -குமுறும் விவசாயிகள்
அம்மாப்பேட்டை பகுதியில் மணல் எடுத்து செல்லும் போது சம்பத்குமார் வண்டி மாட்டிக்கொண்டால், `என்னோட கணவர் தான் விட்டு விடுங்கனு’ அபிராமி போன் செய்து விடுவிக்க சொன்ன சம்பவங்களும் நடந்திருப்பதாகத் தெரிகிறது. மணல் திருட்டில் சம்பத்குமார் எல்லை மீறத் தொடங்கிய பிறகு அது தொடர்பான புகார்கள் எஸ்.பி.ரவளி பிரியா மேடத்திற்கு வந்திருக்கின்றன. இதையடுத்து அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சம்பத்குமாரை கைது செய்த போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தனர்.