“நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எருமப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவர் வருதராஜ் கொரோனாவால் இறந்தார். இதனால், ஒன்றியக்குழுத் தலைவர் தேர்வு செய்யும் மறைமுக தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக, ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு, அரசு சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டது. ஆனால், திடீரென தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 15 பேரில், 10 பேர் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றனர். அவர்கள், தி.மு.க.வினரின் மிரட்டலுக்கு பயந்து, கோயிலுக்கு சென்று விட்டனர். ஆனால், அவர்களை நான் கடத்தி சென்று விட்டதாக, பொதுமக்கள் போர்வையில் தி.மு.க -வினர் கொடுக்கப்பட்ட மனுவில், என் மீது வழக்கு போட்டு தேர்தலை ரத்து செய்திருக்கின்றனர். இதுதொடர்பாக, நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைச் சந்தித்துக் கேட்டேன். அவர், மனுவை பரிசீலனை செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறினார். நான் சென்னையில் இருந்து கடந்த 3 நாள்களுக்கு முன்புதான் நாமக்கல்லுக்கு வந்தேன். அப்படி இருக்கும்போது, நான் எப்படி ஒன்றியக்குழு உறுப்பினர்களைக் கடத்தி இருக்க முடியும்?.
Also Read: ஆம்னி பஸ்ஸில் வந்த பவுன்ஸர்கள்; திமுக-வுக்கு ஓட்டுப்போட்ட அதிமுக; திருப்பத்தூர் தேர்தல் களேபரம்
கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட பா.ஜ.க. உறுப்பினர் உள்பட 10 ஒன்றியக்குழு உறுப்பினர்கள் இங்கே இருக்கின்றனர். தி.மு.க.வுக்குப் பெரும்பான்மை இல்லை என்பதற்காக, தி.மு.க.வினர் சதி செய்து தேர்தலை நிறுத்திவிட்டனர். எப்போது, ஒன்றியக்குழுத் தலைவர் தேர்தல் நடத்தப்பட்டாலும், அதில் அ.தி.மு.க.தான் வெற்றி பெறும். தி.மு.கவினர் என்ன சதி வேலை செய்தாலும் எடுபடாது. அ.தி.மு.க வெற்றியை என்ன தடை போட்டாலும், அவர்களால் பறிக்க முடியாது. என் மீது புகார் அளித்தவர்கள் மீது கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். அப்போது, நடந்தது என்ன என்ற உண்மை தெரியவரும். தி.மு.க.வினரின் மிரட்டல் ஆடியோக்களும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும். தேர்தலை நடத்த ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை இல்லை என்றால், தேர்தலை நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்துக்கு செல்வோம்” என்றார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.