கன்னியாகுமரியில் மழை குறைந்ததால், குடியிருப்புகளிலும் விளைநிலங்களிலும் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியுள்ளது. மூன்று அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 23 ஆயிரம் கனஅடியிலிருந்து 10 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஆறுகளில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது.
சாலைகள், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீர், வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும், சில இடங்களில் மட்டும் தண்ணீர் வடியாமல் இருப்பதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சேத பாதிப்புகளை கணக்கிடுவதில் அரசுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்போதைக்கு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்கள், அங்கேயே இருப்பதற்குத் தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனினும் முஞ்சிறை பகுதியில் சுமார் 200 குடியிருப்புகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது என்பதால், மக்கள் தங்களின் இயல்புவாழ்க்கை கடும் அவதிக்கு உள்ளாகியிருப்பதாக நம்மிடையே தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில் குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் கோதமடக்கு நீர்பிடிப்பு பகுதியில் தண்ணீரில் மிதந்து வந்த 6 மாத குட்டியானையொன்றின் உடல் அங்கிருப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குட்டியானை உடலை மீட்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடைய செய்தி: சேற்றில் சிக்கி குட்டி யானை உயிரிழப்பு: உடலை நெருங்கவிடாமல் காவல் நிற்கும் யானைகள்
குமரி மாவட்டம் கோதையார் வழியாக ஒரு குட்டி யானையின் உடல் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து சென்றதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சில தினங்களுக்கு முன் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பொதுமக்களின் தகவலின் பேரில் களியல் வனத்துறையினர் அந்த யானை குட்டியின் உடலை கண்டுபிடிக்கும் பணியில் நேற்று முன்தினம் முதல் இறங்கினர். இந்நிலையில் இன்று பேச்சிப்பாறை அணையில் நீர்பிடிப்பு பகுதியான கோதமடக்கு பகுதியில் வனத்துறையினர் தண்ணீரில் மிதந்து யானைக்குட்டியின் உடலை கண்டுபிடித்தனர்.
இந்த குட்டி யானை காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துவரப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் கூறியுள்ளனர். இந்த யானைக்குடியின் உடலை மீட்டு இந்த யானைக்குட்டி ஆணா அல்லது பெண்ணா என்பது குறித்தும், அதன்பிறகு பிரேத பரிசோதனை செய்த பிறகு இது எப்படி இறந்தது என்பது குறித்தும் தெரியவரும்.
– மனு