நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்து எச்சரித்து அனுப்பினர்.
சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் மிரட்டல் வந்தது. இதையடுத்து மோப்ப நாய் உதவியோடு வந்த போலீசார், சரத்குமாரின் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.
இந்நிலையில், சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்த்தனர். அந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என தெரியவந்தது. இதைத் தொடர்ந்து நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் (20), என்ற நபர் தான் செல்போன் மூலம் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர். இவர் முன்னாள் முதலமைச்சர்கள், நடிகர் விஜய், அஜித், தற்போதைய முதல்வர் என முக்கிய பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.