கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து மழை நீடித்து வருகிறது. இந்த மழை காரணமாக குமரி மாவட்டம் குளிர்ந்துபோயுள்ளது. விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் காலதாமதமாக பயிரிட்ட நெல் விவசாயிகள் அறுவடை செய்யமுடியாமல் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பெய்த மழை காரணமாக அணைகளில் தண்ணீர்மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை மெல்ல தொடங்கிய மழை இரவு பெரும் மழையாக உருவெடுத்தது. இன்று மதியம் வரை மழை வெளுத்துவாங்கியது. மலைப்பகுதிகளில் பெய்த மழையால் அணைகளில் நீர்மட்டம் மேலும் உயர்ந்துள்ளது. சில அணைகளில் நீர்மட்டம் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளன. சில அணைகள் முழுக் கொள்ளளவை நெருங்கி வருகின்றன. பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு தண்ணீர் வழங்கும் முக்கடல் அணை முழு கொள்ளளவான 25 அடியை எட்டியுள்ளது. 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார் 1 அணை 16 அடியை எட்டியுள்ளது. அதே 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு 2 அணை 16.1 அடி உயரத்தை எட்டியுள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பறை அணை 43.60 அடி நிரம்பியுள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை 73.72 அடி நிரம்பியுள்ளது. இந்த இரண்டு அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் விரைவில் முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சிப்பாறை அணைக்கு 20,000 கன அடி தண்ணீர் உள்வரத்தாக உள்ளது. அணையில் இருந்து 11,000 கன அடி தண்ணீர் திறக்கப்பட வெளியேற்றப்படுகிறது. இதனால் தாமிரபரணி உள்ளிட்ட அறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக கோதையாறு குற்றியார் மோதிரமலை உட்பட 15-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வீட்டில் முடங்கி உள்ளனர். காட்டாற்று வெள்ளத்தால் மலைப்பகுதிகளில் உள்ள தரை பாலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திற்பரப்பு அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவிக்கு அருகில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்மழை மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் பேச்சிப்பாறை அணையை பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.