முதலீட்டாளர்கள் சில முதலீட்டுத் தவறுகளை தவிர்ப்பது மூலம் அதிக செல்வம் சேர்க்க முடியும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் செய்யும் பொதுவான 5 மிகப் பெரிய முதலீட்டு தவறுகள் பற்றி பார்ப்போம்.
1. பணவீக்க விகிதத்தை கணக்கில் எடுக்காது
முதலீட்டின் வருமானத்தை விழுங்குவதில் பணவீக்கத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. பெரும்பாலான முதலீட்டாளர்கள் பணவீக்கத்தை கணக்கில் எடுக்காமல் முதலீடு செய்து விடுகிறார்கள். இதனால் உண்மையான வருமானம் என்பது குறைவாக இருக்கும்.
உதாரணத்திற்கு இன்றைய தேதியில் ஃபிக்ஸட் டெபாசிட் முதலீட்டிற்கு 5% வட்டி விகிதம் கிடைக்கிறது என்றால் பணவீக்க விகிதம் 7% என்றால் வருமானத்தில் இதனை கழிக்கும்பட்சத்தில் மைனஸ் 2 சதவிகிதமாக வருமானம் குறைந்து விடுகிறது. பணவீக்க விகிதம் என்பது சுருங்கச்சொன்னால் விலைவாசி உயர்வுதான். உதாரணத்திற்கு உங்களிடம் 100 ரூபாய் இருக்கிறது. இதனை 5% ஃபிக்ஸட் டெபாசிட்டில் போட்டிருக்கிறீர்கள். ஒரு வருடம் கழித்து 105 ரூபாய் கிடைக்கிறது. பணவீக்க விகிதம் 7% என்றால் ஏதாவது ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் 2 ரூபாய் கடன் வாங்கி தான் வாங்க வேண்டும். எனவே, செய்யும் முதலீடு பணவீக்க விகிதத்தை விட அதிக வருமானம் தருவதாக இருக்க வேண்டும்.
பணவீக்க விகிதம் 7 சதவிகிதம் என்றால் ரூ.1 லட்சத்தின் மதிப்பு 30 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.13,000 ஆக குறைந்து விடும். அதாவது பொருட்களின் விலை உயர்ந்து குறைவான பொருட்களையே வாங்க முடியும். எனவே, பணவீக்கத்தை தாண்டி வருமானம் தரக்கூடிய நவீன பங்குச்சந்தை சார்ந்த திட்டங்களில் அதாவது நிறுவனப் பங்குகள், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்தால்தான் நீண்டகாலத்தில் பணவீக்கத்தை விட அதிக வருமானம் கிடைக்கும்.
பங்குச் சார்ந்த திட்டங்களில் நீண்டகாலத்தில் 12 முதல் 15% வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
Also Read: காம்பௌண்ட் எஃபெக்ட்: ஐன்ஸ்டீன் இதை ஏன் 8-வது அதிசயம்னு சொன்னார்? – பணம் பண்ணலாம் வாங்க – 14
2. கூட்டு வளர்ச்சியின் மகிமையை புரிந்து கொள்ளாதது
நம்மில் பெரும்பாலானோர் முதலீட்டை தாமதமாக ஆரம்பிப்பது பெரிய அளவில் நமது முதலீட்டு இலக்குகளை பாதிக்காது என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை அதுவல்ல. இது மிகப் பெரிய தவறாகும். கூட்டு வளர்ச்சி என்கிற பவர் ஆஃ கம்பவுண்டிங், உங்களின் பணத்தை வெகுவேகமாக அதிகரிக்கச் செய்யும்.
பவர் ஆஃ கம்பவுண்டிங் என்பது வட்டிக்கு வட்டி, வருமானத்துக்கு வருமானம் சேர்த்து தருவதாகும்.
உதாரணத்துக்கு, ரமேஷ் என்பவர் அவரின் 25-வது வயதில் மாதம் ரூ. 5,000 முதலீட்டை ஆரம்பிக்கிறார். இவர் தனது 35 வயது வரையில், 10 ஆண்டுகளுக்கு அதாவது மொத்தம் ரூ.6 முதலீடு செய்துவிட்டு அப்படியே விட்டு விடுகிறார்.
இதுவே, கண்ணன் என்பவர் அவரின் 40-வது வயதில் மாதம் ரூ.15,000 முதலீட்டை ஆரம்பித்து அவரின் 60 வயது வரை மொத்தம் ரூ. 36 லட்சம் முதலீடு செய்கிறார். இந்த முதலீடுகளுக்கு ஆண்டுக்கு சராசரியாக 12% வருமானம் கிடைத்தால் 60 வயதில் யாருக்கு அதிகத் தொகை கிடைத்திருக்கும் தெரியுமா?
ரமேஷூக்கு ரூ. 1.97 கோடியும் கண்ணணுக்கு ரூ. 1.49 கோடியும் கிடைத்திருக்கும். ரமேஷ் இளம் வயதில் ஆரம்பித்ததால், அவரின் முதலீட்டுத் தொகை மிகக் குறைவாக இருந்தாலும் முதலீட்டுக் காலம் மிக நீண்டதாக இருந்ததால் அவருக்கு அதிக தொகுப்பு தொகை கிடைத்திருக்கிறது. எனவே, நீங்களும் முடிந்த வரை வெகு சீக்கிரமாக முதலீட்டை ஆரம்பித்து அதிக வருமானம் ஈட்டுங்கள்.
Also Read: பங்குச்சந்தை முதலீடு உங்களுக்கு சரிப்பட்டு வருமா? இதைப் படிச்சிட்டு முடிவெடுங்க! – 20
3. எஸ்.ஐ.பி முதலீட்டை ஆரம்பிக்காதது
ஒருவர் அவரின் நிதி இலக்குகளை எளிதாக நிறைவேற்ற, அதிக செல்வம் சேர்க்க சீரான முதலீட்டுத் திட்டம் என்கிற எஸ்.ஐ.பி முறை உதவுகிறது. இந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் ஒருவரிடம் முதலீட்டு ஒழுங்கை ஏற்படுத்துகிறது.
மாதம் ரூ.100, ரூ.500 என குறைந்த தொகையை கூட இந்த முறையில் முதலீடு செய்ய முடியும்.
இந்த முறையில் முதலீடு செய்யும் போது பங்குச் சந்தையின் நேரம் காலம் பார்க்க தேவையில்லை. சந்தையில் நேரம் பார்த்து முதலீடு செய்வதை விட முதலீட்டுக் காலம் அதிகமாக இருப்பது மூலம் அதிக வருமானத்தை பெற முடியும்.
4. டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்காதது
பெரும்பாலான நிதி ஆலோசகர்கள், முதலீட்டாளர்களை டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கச் சொல்வார்கள். இது பாலிசி முதிர்வின் போது பணம் எதுவும் கிடைக்காத முழுமையான ஆயுள் காப்பீடு பாலிசியாகும். இந்த பாலிசியை குறைந்த பிரீமியத்தில் அதிக தொகைக்கு எடுப்பது மூலம் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அவர் முதலீடுகள் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டிருந்த பிள்ளைகளின் உயர்கல்வி, கல்யாணம் போன்ற நிதி இலக்குகள் தடைபடாமல் திட்டமிட்டப்படி நடக்க இன்ஷூரன்ஸ் இழப்பீட்டுத் தொகை உதவும்.
வீட்டுக் கடன் போன்ற பெரிய கடன்கள் இருந்தால் அதனையும் கவர் செய்கிற மாதிரி அதிக தொகைக்கு டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது. பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தைப் போல் 10 முதல் 20 மடங்கு தொகைக்கு டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
Also Read: வங்கி டெபாசிட்டில் உங்கள் பணம் தூங்குகிறதா? இவற்றை ஏன் முயற்சி செய்து பார்க்கக்கூடாது? – 10
5. மருத்துவக் காப்பீடு எடுக்காதது
தீடீர் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் நீண்ட கால சேமிப்பு மற்றும் முதலீடுகள் காணாமல் போய்விடுவதை பலர் அனுபவப் பூர்வமாக கண்டிருப்பார்கள். இதனை தவிர்க்க மருத்துவக் காப்பீடு பாலிசியை குடும்ப உறுப்பினர்கள் அனைவர் பெயரிலும் எடுப்பது அவசியம்.
தனித் தனியாக அனைவரின் பெயரிலும் பாலிசி எடுத்தால் அதிக பிரீமியம் கட்ட வேண்டியிருக்கும். இந்த அளவுக்கு வசதி இல்லை என்றால் ஒட்டு மொத்தக் குடும்பத்தினருக்கும் கவரேஜ் அளிக்கும் ஃப்ளோட்டர் பாலிசி எடுப்பது நல்லது. மருத்துவ பணவீக்க விகிதம் அதாவது மருத்துவச் செலவுகள் அதிகரிப்பு என்பது ஆண்டுக்கு 15 சதவிகிதமாக இருக்கிறது. அந்த வகையில் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என அதிக தொகைக்கு மருத்துவக் காப்பீட்டு பாலிசி எடுப்பது அவசியமாக இருக்கிறது.