ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய நால்வர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு இருந்துவந்தது. 2016 டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா காலமானதும், சசிகலா கட்சியின் பொதுச் செயலாளரானார். அத்தோடு முதல்வராகவும் ஆக முயன்றார். அச்சமயத்தில்தான் சொத்துக்குவிப்பு வழக்கின் இறுதித் தீர்ப்பு வெளியானது. நால்வரும் குற்றவாளிகள் என்றும் நான்காண்டு சிறைத்தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு மட்டும் 100 கோடி அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
2017 பிப்ரவரி 14-ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைக்குச் சென்றனர். நான்காண்டுகள் கடந்த பின்னர் அபராதத் தொகையைக் கட்டியதால் சசிகலா மற்றும் இளவரசி இந்தாண்டு தொடக்கத்தில் விடுதலையாகிவிட்டனர். அபராதத்தொகை கட்டாததால், சுதாகரன் கூடுதலாக ஓராண்டு சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அந்த காலமும் முடிவடையவே, வரும் அக்டோபர் 16-ம் தேதி சுதாகரன் விடுதலையாகப் போகிறார்.
Also Read: சசிகலா விடுதலை: ஜெ.நினைவிடத் திறப்பு… டி.டி.வி.தினகரன் சூளுரைப்பு… பின்னணி என்ன?
சசிகலாவின் மூத்த சகோதரி வனிதாமனியின் மகன் தான் சுதாகரன். அவரை வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, 1991 காலகட்டத்தில் மிக பிரமாண்டமான முறையில் சுதாகரனுக்குத் திருமணம் நடத்தி வைத்தார் ஜெயலலிதா. இந்த சொத்துக்குவிப்பு வழக்குக்கே அந்த திருமணத்தின் பிரமாண்டம் தான் மூல காரணம் என்றாலும் மறுப்பதற்கில்லை!