மும்பை அருகில் உள்ள பிவாண்டி என்ற இடத்தில் வசிப்பவர் சவிதா(35). சவிதாவின் கணவர் சஞ்சய் மதுவுக்கு அடிமையானவர் என்று சொல்லப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். சவிதாவின் வீட்டிற்கு சற்று தள்ளி அவரின் சகோதரர் அக்ஷய் வசித்து வந்தார். சம்பவத்தன்றும் வழக்கம் போல் சஞ்சய் மது அருந்திவிட்டு வந்து தனது மனைவியை போட்டு அடித்துக்கொண்டிருந்தார். அந்நேரம் சவிதாவின் சகோதரர் அக்ஷய் அங்கு வந்தார்.
தனது சகோதரியை மைத்துனர் அடித்து உதைப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை தடுக்க முயன்றார். அதோடு சஞ்சயை அடிக்க ஆரம்பித்தார். இதனால் ஆத்திரமடைந்த சஞ்சய் தனது மைத்துனரை அடித்து உதைக்க ஆரம்பித்தார். இதனை அவரது மனைவி தடுக்க முயன்றார். ஆனால் தனது சகோதரன் அடிபடுவதை சவிதாவால் தடுக்க முடியவில்லை. இதனால் தனது கணவனின் கழுத்தை பிடித்து நெரிக்க ஆரம்பித்தார்.
அக்ஷயும் சுதாரித்துக்கொண்டு சஞ்சய் கழுத்தை நெரித்ததாக சொல்லப்படுகிறது. இதில் சஞ்சய் உயிரிழந்தார். இதனை நேரில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்து வந்து சவிதா, அக்ஷய் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, மற்றொரு இடத்தில் விவாகரத்துக்கு மறுத்த மனைவியை கொலை செய்ய துப்பாக்கி வாங்கிய கணவன் கைது செய்யப்பட்டார். பிவாண்டி பகுதியில் வசிக்கும் கமல் ஷெகல் என்பவர் தனக்கு திருமணாகிவிட்ட நிலையில் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தவர், இதற்காக தனது மனைவியிடம் விவாகரத்து கேட்டார். ஆனால் அவரது மனைவி விவாகரத்து கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த கமல் தனது மனைவியை கொலை செய்ய முடிவு செய்து அதற்காக உத்தரப்பிரதேசத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை ரூ.50 ஆயிரத்திற்கு வாங்கினார். அவரது திட்டம் குறித்து போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீஸார் அதிரடி சோதனை நடத்தி கமலை கைது செய்து அவரிடமிருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.