கடந்த அதிமுக ஆட்சியில் தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் 100 ஏக்கர் நிலத்துக்கு மேல் அதிமுக ஒன்றியச் செயலாளர் மற்றும் அவரது உறவினர்களின் பெயர்களில் அரசு நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிலங்கள் வீட்டு மனைகளாக பிரிக்கப்பட்டு வட்டாட்சியர் அனுமதியோடு பத்திரப்பதிவு நடைபெற்றுவிட்டது எனப் புகார் எழுந்தது.
பெரியகுளம் வட்டத்தில் உள்ள வடவீரநாயக்கன்பட்டி வருவாய் கிராமம், தேனி ஆட்சியர் குடியிருப்பு, பல்துறை அலுவலகம், ஆயுதப்படை மைதானம் உள்ளிட்ட அரசு அலுவலகம் நிறைந்துள்ள கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் ஏராளமான அரசு நிலங்கள் உள்ளன. வடவீரநாயக்கன்பட்டி கிராமம் சர்வே எண் 814, 2184, 2201, 1046, 1051 ஆகிய புல எண்களுக்கு கட்டுப்பட்ட நிலங்களில் 100 ஏக்கர் வரை அதிமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னப்பிரகாஷ் மற்றும் அவரது தந்தை வீரத்தேவர் உள்ளிட்ட அவரது உறவினர்கள் பெயரில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறையில் நிலம் தொடர்பான அடிப்படை ஆவணமாக விளங்குவது `அ பதிவேடு’ ஆகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த ஆவணத்தில் பட்டா மாறுதல், திருத்தம் மேற்கொள்ள கோட்டாட்சியருக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த அனுமதியைப் பயன்படுத்தி குறுவட்ட நில அளவர், வட்டாட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் கூட்டு சேர்ந்து பல லட்ச ரூபாய் லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு பட்டா வழங்கியுள்ளனர். இந்த ஆவணம் தொடர்பாக இணையதளத்தில் தேடியபோது வடவீரநாயக்கன்பட்டி கிராமத்தில் குறிப்பிட்ட சர்வே எண்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. இந்த விவரங்கள் வருவாய்த்துறை உயரதிகாரிகளுக்குத் தெரிந்தும் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
Also Read: “இறைவன் சொத்து இறைவனுக்கே; கோயில் நிலத்துக்குப் பட்டா வழங்க முடியாது!”- அமைச்சர் சேகர் பாபு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், “பெரியகுளம் வட்டத்தில் வடவீரநாயக்கன்பட்டி, கெங்குவார்பட்டி, தாமரைக்குளம் ஆகிய பகுதிகளில் 100 ஏக்கருக்கு மேல் மோசடியாக பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்தப் புகாரை பெரிய அளவில் விசாரிக்காமல் மூடிமறைக்க வாய்ப்புள்ளது. எனவே இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளோம்” என்கிறார்.
இந்நிலையில், இவ்விவகாரத்தில் தொடர்புடைய பெரியகுளம் வட்டாட்சியர் கிருஷ்ணகுமார், போடி சமூக நல பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் ரத்தினமாலா, போடி தேர்தல்பிரிவு துணை வட்டாட்சியர் மோகன்ராம், ஆண்டிபட்டி தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சஞ்சீவிகாந்தி ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் உத்தரவிட்டுள்ளார்.