நெல்லை மாவட்டம் தாழையூத்துப் பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் சக்தி (10) அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் கார்த்திக்(13). இரு சிறுவர்களும் நண்பர்கள் என்பதால் ஒன்றாக விளையாடச் செல்வது வழக்கம். வடக்கு தாழையூத்துப் பகுதிக்கு சைக்கிளில் இருவரும் சென்றுள்ளனர்.
அந்தப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் உள்ள கல் குவாரி மழைநீர் தேங்கிய நிலையில் இருந்ததால் அதில் குளித்திருக்கிறார்கள். நீந்தும்போது ஆழமானப் பகுதிக்கு இருவரும் சென்றபோது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டனர். அந்த வழியாகச் சென்றவர்கள் சைக்கிள் ஒன்று நிற்பதைக் கண்டு அங்கு சென்று பார்த்து இருவரின் உடல்களையும் மீட்டுள்ளனர்.
சிறுவர்கள் உயிரிழந்தது தொடர்பாக தாழையூத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ததுடன், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த கல் குவாரி அங்குள்ள மயில் பாண்டி என்பவருக்குச் சொந்தமானது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதேபோல அந்தப் பகுதியில் மேலும் சில கல் குவாரிகள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டினார்கள்.
Also Read: ராதாபுரம்: கல் குவாரி வெடியால் குழந்தை பலியான சம்பவம்;
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்!
பல ஆண்டுகளாகச் செயல்படாமல் இருக்கும் கல் குவாரிகள் ஆபத்து மிகுந்தவை என்பதால் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு செல்லாத வகையில் தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தண்ணீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.