முதுமலை புலிகள் காப்பகத்தில் T-23 என எண்ணிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்த ஆண் புலி ஒன்று, அதன் உடலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக காட்டில் இரை தேட முடியாமல் காட்டை விட்டு வெளியேறியுள்ளது. தேயிலைத் தோட்டத்தில் தஞ்சம் புகுந்திருக்கும் அந்த புலி நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக 15-க்கும் அதிகமான கால்நடைகளை வேட்டையாடியிருக்கிறது. தேவன் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த சந்திரன் என்ற நபரை கடந்த வாரம் தாக்கியது.
தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்த சந்திரனை ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இவரது இறப்புக்குக் காரணமான குறிப்பிட்ட அந்த புலியை பிடிக்க வலியுறுத்தியும் வனத்துறையினரைக் கண்டித்தும் கூடலூரில் ஏராளமான மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அடுத்த நபரை புலி தாக்குவதற்குள் அந்த புலியைப் பிடிக்க களமிறங்கியது வனத்துறை.
Also Read: நீலகிரி: 2 மாதங்களில் 11 மாடுகள்; புலி தாக்கிக் கொல்லப்பட்ட மாட்டுடன் வனத்துறை அலுவலகம் முற்றுகை!
கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள், பறக்கும் கேமராக்கள், கேரளாவில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்புக் குழு, வனத்துறையின் களப்பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள், காவல்துறையினர் என புலியைப் பிடிக்க பெரும்படையுடன் களத்தில் இறங்கி புலியைத் தேடி வந்தனர்.
இந்நிலையில், இன்று மசினகுடி அருகில் உள்ள ஒலகேரி பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மாதன் என்ற பழங்குடியின நபரைப் புலி தாக்கியது. அவரது சடலத்தை காட்டுக்குள் இழுத்துச் சென்று உடல் பாகங்களை தின்றுள்ளது. இதையறிந்த அக்கம்பக்கத்தினர் கூச்சலிட்டு அந்தப் புலியை விரட்டினர். அடுத்தடுத்து நிகழும் புலி தாக்குதல் சம்வத்தால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். மசினகுடி மக்கள் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
புலி தாக்குதல் குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரி ஒருவர்,”டைகர் 23 என்ற பெயரில் எங்களால் அடையாளம் வைக்கப்பட்டுள்ள இந்த புலி இதுவரை மனிதர்களை தாக்கி வந்தாலும் உடலை தின்றதில்லை.ஆனால், முதல் முறையாக இன்றைக்கு மாதவனின் உடல் பாகங்களை தின்றுள்ளது.இந்த புலி ஆட்கொல்லியாக மாறிவிட்டது”என்றார். தற்போது வனத்துறை அந்தப் புலியை சுட்டுப் பிடிக்க உத்தரவிட்டுள்ளது.