ஒரு ஏக்கருக்கு 70 டன் வீதம் பத்து ஏக்கரில் 700 டன் கரும்பு மகசூல் செய்து தஞ்சாவூர் அருகே உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்கு அனுப்பிய அதிமுக முன்னாள் எம்.பியை ஆலை நிர்வாகம் பாராட்டி பரிசு வழங்கியிருக்கிறது. அவரும் ஒரு விவசாயியாக தான் பெருமிதம் அடைந்ததாக தனது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தியிருக்கிறார்.
Also Read: பயிர்க்கடன் தள்ளுபடி, பாடத்தில் நம்மாழ்வார் கருத்துகள்; முதல்வருடனான சந்திப்பில் விவசாயிகள் கோரிக்கை
தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சக்கரை ஆலைக்கு உட்பட்ட பகுதியில் கரும்பு விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ஆலை நிர்வாகம் பல செயல்களை செய்து வருகிறது. அதன்படி அரவைப்பருவத்தின் போது அதிகளவில் கரும்பு மகசூல் செய்வதுடன், அவற்றை அரவைக்காக ஆலைக்கு சப்ளை செய்கின்ற விவசாயிகளைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு வருடமும் பரிசு வழங்கி பாராட்டி வருகிறது.
அதன்படி 2020-21ம் ஆண்டுக்கான பரிசு பெறும் விவசாயிகளின் பட்டியலை சமீபத்தில் சர்க்கரை ஆலை நிர்வாகம் வெளியிட்டது. அதில் புனல்குளம் கிராமத்தில் ஒரு ஏக்கருக்கு 70 டன் வீதம் 10 ஏக்கரில் 700 டன் கரும்பு மகசூல் செய்து ஆலைக்கு அனுப்பிய விவசாயியான, திருச்சி புறநகர் தெற்கு அ.தி.மு.க மாவட்ட செயலாளரும், திருச்சி தொகுதியின் முன்னாள் எம்.பியுமான குமாருக்கு, பரிசு வழங்கப்படுவதாக கரும்பு ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற கரும்பு சாகுபடியில் `நவீன தொழில் நுட்பங்களும், இயந்திரமாக்கலும்’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியில் முன்னாள் எம்.பி.குமாரிடம் அதற்கான பரிசினை ஆலை நிர்வாகம் வழங்கியிருக்கிறது.
இது குறித்து ஆலை நிர்வாகம் தரப்பில், “கந்தர்வக்கோட்டை அருகே உள்ள புனல்குளம் அதிமுக முன்னாள் எம்.பி குமாரின் சொந்த ஊராகும். அவர் தனது ஊரில் அவருக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கரில் நெல் மற்றும் கரும்பு விவசாயம் செய்து வருகிறார். அதன்படி பத்து ஏக்கரில் 700 டன் கரும்பு சாகுபடி செய்து அசத்தி அதனை ஆலைக்கு அனுப்பி வைத்தார். அதிக கரும்பு மகசூல் செய்த எட்டு விவசாயிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் குமாரும் ஒருவர். அவரை பாராட்டி பரிசு வழங்கியிருக்கிறோம். விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக இதனை தொடர்ந்து செய்து வருகிறோம்” என்று தெரிவித்தனர்.
இது குறித்து குமாரிடம் பேசினோம். “ தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தாலும் விவசாயத்தை நான் ஒரு போதும் கைவிட்டதில்லை. நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய வயலுக்குச் சென்று விவசாயப் பணிகளை மேற்கொள்வேன். பொதுவாக கரும்பினை துண்டு துண்டாக வெட்டி அதனை நிலத்தில் நடவு செய்வோம். ஆனால் ஆலை நிர்வாகம் கரும்பினை கனு, கனுவாக வெட்டி அதனை ட்ரேயில் வைத்து பொள்ளாச்சி பகுதியில் வளர்ப்பார்கள். அதை வாங்கி ஊன்ற ஆலை நிர்வாகத்தினர் பரிந்துரை செய்ததால் அதை வாங்கி உன்றினோம். அதற்கு முன்பாக மாட்டு சாணம் உள்ளிட்டவற்றை அடி உரமாக பயன்படுத்தினோம். இயற்கை உரங்களையும் செயற்கை உரங்களையும் கலந்துதான் சாகுபடி செய்தோம். சொட்டு நீர் பாசன முறையில் தேவையான அளவு தண்ணீர் பாய்ச்சினோம். ஆலையில் அலுவலர்கள் வழங்கிய ஆலோசனைகளையும் கடைபிடித்தோம்.
Also Read: `ஒரே அறிவிப்பில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள்; இதுதான் முதல் முறை!’ – நெகிழும் விவசாயிகள்
அதனாலேயே ஏக்கருக்கு 70 டன் சாத்தியமானது. இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை கரும்பு சாகுபடி எனக்கு அதிக இனிப்பை தருகிறது. அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலைக்குட்ப்பட்ட பகுதியில் அதிக அளவில் கரும்பு மகசூல் செய்ததாக என்னை தேர்ந்தெடுத்து பரிசு வழங்கியுள்ளனர். ஒரு விவசாயியாக நான் பெருமிதம் அடைகிறேன்” என்றார்.