“கோவில்கள் மூடுவது பற்றி தமிழக மக்கள் கேள்வி எழுப்பத் துவங்கிவிட்டார்கள். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. விரைவில் ராமகோபாலன் விரும்பிய தமிழகமாக மலரும். இதில் எந்த மாற்றமும் இல்லை. தமிழகத்தில் உள்ள எம்.பி-க்கள் ஜிஎஸ்டி பற்றி முழுமையாகத் தெரியாமல் பேசுகிறார்கள்” என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஆளும் கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
Also Read: அண்ணாமலை: உதயநிதி மீது வழக்கு பதிய வேண்டும்| காங்கிரஸின் நிலை வேதனை – கபில் சிபல்|Quicklook
இந்து முன்னணி அமைப்பின் நிறுவனத் தலைவர் மறைந்த இராமகோபாலனின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரின் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, “சுதந்திரப் போராட்ட காலத்தில் பிறந்து பல்வேறு நல்ல விஷயங்களைச் செய்தவர் ராமகோபாலன். திராவிட கழகத்தைப் பார்த்தவர். 1980-ல் மீனாட்சிபுரம் பிரச்னையின் போது மதம் மாறுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தவர்.
அன்று இராமகோபாலன் இல்லை என்றால் தமிழகம் எங்குச் சென்று இருக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. இந்து என்பது வாழ்வியல் முறை, ஆங்கிலேயரது வரவுக்குப் பின்னர், அவர்கள் அதை மதத்திற்குள் இணைத்துவிட்டனர். இந்து வாழ்வியல் முறைக்கு சில சிக்கல்கல்கள் வந்தபோது இராமகோபாலன் முன்னின்று அந்த சிக்கல்களைக் களைந்தார்.
Also Read: `பள்ளிகளைத் திறப்பது காலத்தின் கட்டாயம்’ – உள்ளாட்சித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அண்ணாமலை!
ஆங்கிலேயர் திணித்த இந்து மதக்கோட்பாடை, மீண்டும் இந்து வாழ்வியல் முறையாக மாற்றிக் காட்டியவர் இராமகோபாலன். இந்த வரலாறு எல்லோருக்கும் தெரியும். நான் அவரைப்பற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவிற்கு உயர்வான மனிதர்.
வார இறுதி நாட்களில் கோயில்களை மூட வேண்டும் உள்ளிட்ட திமுக அரசு எடுக்கும் முடிவுகளை, அமைப்புகளைத் தாண்டி பொதுமக்களே கேள்வி கேட்கத் துவங்கிவிட்டார்கள். தமிழகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. விரைவில் இராமகோபாலன் விரும்பிய தமிழகமாக மலரும்.
இதில் எந்த மாற்றமும் இல்லை. வரலாறு எப்படி எல்லாம் திரிக்கப்படுகிறது என்பதை அனைவரும் படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். கல்வி, அறிவு மட்டுமே யாராலும் ஒருபோதும் அழிக்க முடியாது. இதற்கு முதலில் இந்திய வரலாற்றைப் படிக்க வேண்டும். ஜிஎஸ்டி என்றால் என்னவென்று தெரியாமல் தமிழக எம்.பிக்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசிமுடித்தார்.