சென்னை கொரட்டூர், பாரதி நகரில் வசிப்பவர் பிரதாப் . இவர் ஒடிசாவைச் சேர்ந்தவர். இவரின் மனைவி குமாரி (23). இவர்கள் இருவரும் கொரட்டூர் பகுதியில் தங்கி இருந்து கட்டட வேலை செய்து வருகின்றனர். கர்ப்பிணியான குமாரிக்கு ஒடிசாவிலிருந்து ஒரு அதிர்ச்சி தகவல் வந்திருக்கிறது. அது என்னவென்றால், குமாரின் அண்ணி பிரசவத்தின்போது உயிரிழந்துவிட்டதாக அவரிடம் கூறியிருக்கிறார்கள். அதனால் பிரதாப், குமாரி ஆகியோர் ஒடிசாவுக்குச் சென்று இறுதி சடங்கில் கலந்துகொண்டனர். அப்போது அண்ணி எப்படி இறந்தார் என்று உறவினர்களிடம் குமாரி கேட்டறிந்தார்.
இதையடுத்து சென்னைக்கு பிரதாப், குமாரி திரும்பிவந்தனர். பிரசவத்தின்போது அண்ணி உயிரிழந்த சம்பவம் குமாரியை மனதளவில் பாதித்தது. தனக்கும் அப்படியொரு நிலைமை ஏற்படுமோ என அவர் அச்சம் அடைந்திருக்கிறார். அதனால் கருவைக் கலைக்க குமாரி முடிவு செய்தார். அதன்படி கருவைக் கலைக்க மாத்திரைகளைச் சாப்பிட்டிருக்கிறார். அதனால் குமாரியின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து குமாரியை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரதாப் அழைத்துச் சென்றார். அப்போது குமாரியை டாக்டர்கள் பரிசோதித்தபோதுதான் கருவைக் கலைக்க சாப்பிட்ட மருந்துகளால் கருப்பை பாதிக்கப்பட்டிருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குமாரிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து குமாரியின் சகோதரி கீதா கொரட்டூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மாவட்ட குடும்பநல இணை இயக்குனர் டாக்டர் அமுதா விசாரணை நடத்தி வருகிறார். குமாரியின் சகோதரி கீதா, கொரட்டூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “ நான் கொரட்டூரில் குடியிருந்து வருகிறேன். எனது அக்கா குமாரி. அக்காளின் கணவர் பிரதாப் கொத்தனாராக வேலைப்பார்த்து வருகிறார். இவர்களுக்கு 1.11.2020-ம் தேதி திருமணம் நடந்தது. தற்போது குமாரி, 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். குமாரியும் பிரதாப்பும் சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். எங்கள் அண்ணி ஒருவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்கு குழந்தைப் பிறக்கும்போது உயிரிழந்துவிட்டார். அந்தத் தகவலைக் கேட்டபிறகு அக்காவும் மாமாவும் கலந்து பேசி குழந்தை வேண்டாம் என முடிவு செய்து 15.9.2021-ம் தேதி தனியார் கிளினிக்கில் கருக்கலைப்பு மாத்திரைகளை வாங்கி அக்கா குமாரி சாப்பிட்டார்.
Also Read: `15 வயது சிறுமிக்குக் கருக்கலைப்பு!’ – வளர்த்த பேத்தியைப் பாலியல் வன்கொடுமை செய்த தாத்தா!
19.9.2021-ம் தேதி குமாரி கழிவறைக்குச் செல்லும்போது கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டாள். உடனே அவளை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். பின்னர் 25.9.2021-ம் தேதி குமாரிக்கு கை, கால் வலி ஏற்பட்டதால் மீண்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அப்போதுதான் அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது கர்ப்பபை முழுவதும் தொற்று ஏற்பட்டு சீழ் பிடித்திருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறினர். அதன்படி 26.9.2021-ம் தேதி அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது அவர் உயிரிழந்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.குமாரி மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.