திண்டுக்கல் அருகே அனுமந்தராயன்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் திண்டுக்கல் தாலுகா காவல் ஆய்வாளர் பாஸ்டின் தினகரன் தலைமையிலான தனிப்படை போலீஸார் அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தருமத்துப்பட்டி சாலையில் உள்ள தோட்டத்து வீடு ஒன்றில் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில் 234 பெட்டிகளில் இருந்த 11 ஆயிரத்து 232 போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

மேலும், அங்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்துவந்த அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த இன்பராஜ்(52), சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியைச் சேர்ந்த சிவா(23), மறவமங்கலத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சண்முகபாண்டியன்(36), சங்கர்(34), சிங்கம்புணரியைச் சேர்ந்த பிரபு(26), வேலாரேந்தல் பகுதியைச் சேர்ந்த வினோத்(20) ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். அனுமந்தராயன்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலாவின் கணவர் இன்பராஜின் தோட்டத்து வீட்டில் வைத்து தான் போலி மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை நடந்துள்ளது. இன்பராஜ் அனுமந்தராயன்கோட்டை ஊராட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர், தற்போது திமுக கிளைச் செயலாளராக உள்ளார்.

போலீசார்

திண்டுக்கல்லில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவி என்ற பெண் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட பரபரப்பு தணியும் முன்னர், அனுமந்தராயன்கோட்டையைச் சேர்ந்த ஸ்டீபன்(38) என்பவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலைக்கும் 11 ஆயிரம் போலி மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டதற்கு தொடர்பு உள்ளது என்கின்றனர் கொலையான ஸ்டீபனின் உறவினர்கள்.

ஸ்டீபன்

Also Read: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் தலை துண்டித்துக் கொலை! – திண்டுக்கல்லில் அதிர்ச்சி

மேலும், ஸ்டீபனுக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர் ஜவுளி வியாபாரம் செய்துவந்தார். இவருக்கும் திமுக பிரமுகர் இன்பராஜூம் நல்ல பழக்கம் இருந்தது. இந்நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதனால் ஸ்டீபன் தான் போலி மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருக்கும் தகவலை போலீஸாருக்கு சொல்லியிருக்கலாம் என நினைத்து இன்பராஜ் தரப்பினர், ஸ்டீபனை கொலை செய்துவிட்டனர் எனப் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.

எஸ்பி சீனிவாசன்

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசனிடம் பேசினோம். அவர், “ஸ்டீபனின் உறவினர்கள் வாய்மொழியாகத் தான் இன்பராஜ் தரப்பினர் கொலை செய்துள்ளனர் எனப் புகார் அளித்துள்ளனர். அதனடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய நிர்மலாதேவி மற்றும் ஸ்டீபனை தலை துண்டித்து கொலைசெய்த குற்றவாளிகளைப் பிடிக்க தலா 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தீவிர விசாரணை நடந்து வருகிறது. விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம்,” என்றார்.

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.