உலகமே கொரோனா பயத்தில் 2019-ன் இறுதியிலிருந்து முகக்கவசம் அணிந்துகொண்டிருக்க, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலிலுள்ள உணவகத்தின் உரிமையாளர் ஒருவர் `முகக்கவசம் போட்டிருந்தா வெளியே போங்க’ என்று திகில் கிளப்பிக்கொண்டிருக்கிறார்.
டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்தவர் நடாலி வெஸ்டர். இவர் தன் கணவர், 4 மாதக் குழந்தை மற்றும் நண்பர்களுடன் சில தினங்களுக்கு முன்னர் உணவகம் ஒன்றுக்குச் சென்றிருக்கிறார். நடாலியின் கைக்குழந்தைக்கு நோய் எதிர்ப்புசக்தி குறைவு பிரச்னை இருப்பதால், உணவருந்தும் மற்றும் நீரருந்தும் நேரம் தவிர, எப்போதும் முகக்கவசம் அணிகிற பழக்கத்தைப் பின்பற்றி வந்திருக்கிறார்கள்.
Also Read: `தடுப்பூசி போட்டவர்களும் இனி மாஸ்க் அணிய வேண்டும்!’ – அமெரிக்காவின் புதிய முடிவுக்கு என்ன காரணம்?
தவிர, நடாலியும் அவரின் கணவரும் முழுமையான தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களும்கூட. ஆனால், அவர்கள் உணவருந்தச் சென்ற உணவகத்தின் உரிமையாளரோ `முகக்கவசம் அணிந்தவர்களுக்கு அனுமதியில்லை’ என்கிற கொள்கையைப் பின்பற்றி வந்திருக்கிறார். அதனால், நடாலி மற்றும் அவருடன் வந்தவர்களை வெளியேற்றியிருக்கிறார் உணவகத்தின் உரிமையாளர்.
இதுபற்றி தன்னுடைய ட்விட்டரில் காணொளி ஒன்றை பதிவேற்றியிருக்கிற நடாலி, “கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக இவ்வளவு அறியாமையுடன் சிலர் இருக்கிறார்கள் என்பது எனக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. எங்கள் நாட்டு உணவகத்தில் இப்படியொரு கொள்கை வைத்திருப்பார்கள் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்கவில்லை. அவர்களுடைய கொள்கையைப்பற்றி அறியாமல் நான் அந்த உணவகத்துக்குச் சென்றுவிட்டேன். இப்படிப்பட்டவர்களால், கொரோனா வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவும் என்பதை நினைத்துப்பார்க்கவே அதிர்ச்சியாக இருக்கிறது. நான் அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது புகார் தெரிவிக்கவில்லை. அமெரிக்காவில் முகக்கவசம் மீதான கருத்துகள் எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கின்றன என்பதைத் தெரிவிக்கவே இதைப் பொதுவெளியில் சொல்கிறேன்” என்றிருக்கிறார்.
உணவகத்தின் உரிமையாளரோ, “இது என் உணவகம். என் உழைப்பால், என் வியர்வையால், என் ரத்தத்தால் உருவானது. இங்கு முகக்கவசம் அணியாதவர்களுக்கு மட்டுமே அனுமதி. எனக்கு முகக்கவசத்தின் மீது நம்பிக்கையில்லை” என்றிருக்கிறார்.