கடந்த 2010-ல் சென்னையில் ஆரம்பிக்கப்பட்ட ஃப்ரஷ் ஒர்க்ஸ் (FreshWorks) சாஃப்ட்வேர் சர்வீஸ் நிறுவனத்தின் ஐ.பி.ஓ, அமெரிக்க பங்குச்சந்தையான `நாஸ்டாக்’-ல் இன்று பட்டியலிடப்பட்டிருப்பதை இந்தியப் பங்குச் சந்தை வட்டாரங்கள் மிக உன்னிப்பாக கவனிக்கின்றன. ஏனெனில், இந்தியாவின் சாஃப்ட்வேர் ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்று, நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
சென்னை மற்றும் கலிஃபோர்னியாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் இந்த நிறுவனம் நாஸ்டாக் சந்தையில், தனது நிறுவனத்தின் புதிய பங்குகளை வெளியிட்டு சுமார் 1.13 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.8,345 கோடி) திரட்டப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில், இன்று நாஸ்டாக் சந்தையில் `FRSH’ என்கிற பெயரில் 285 கோடி ரூபாய்க்கு (28.5 மில்லியன்) பங்குகளை வெளியிட்டிருக்கிறது.
Also Read: “Made in India போல Made in Tamilnadu என்ற குரல் ஒலிக்கவேண்டும்!” – மு.க.ஸ்டாலின் விருப்பம்
இந்த ஐ.பி.ஓ-வில் வெளியிடப்படும் பங்கு ஒன்றின் விலை 28 – 32 டாலர் என கடந்த வாரத்தில் இந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. ஆனால், இரண்டு தினங்களுக்கு முன்பு, 32-34 டாலராக பங்கு விலையை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இன்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டபோது பங்கு ஒன்றின் ஃபிக்ஸடு விலை 36 டாலருக்கு பட்டியலாகி இருக்கிறது. இந்த ஐ.பி.ஓ வெளியீட்டின் மூலம் இந்த நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் வரையிலான மதிப்பீட்டைப் பெறவுள்ளதாக தெரிகிறது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சி.இ.ஓ-வான கிரிஷ் மாத்ருபூதம் பல்வேறு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றினாலும், சென்னையின் முன்னணி நிறுவனமான ZOHO நிறுவனத்தில் பல உயர்பதவியில் பணியாற்றி அங்கு கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் அக்டோபர் 2010-ல் ஃப்ரஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தை நிறுவி இன்று மிகப் பெரிய நிறுவனமாக வளர்த்தெடுத்துள்ளார்.
இந்நிறுவனம் தற்போது அமெரிக்காவின் முன்னணி டெக் சேவை நிறுவனங்களில் ஒன்றான சேல்ஸ்ஃபோர்ஸ் (salesforce) நிறுவனத்திற்கு நேரடி போட்டி நிறுவனமாகவே உருமாறியிருக்கிறது.
தற்போது நாஸ்டாக் சந்தையில் பட்டியலிடப்பட்டிருப்பதன் மூலம், பெரும் முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. 11 வருடமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், அமெரிக்காவில் இயங்கினாலும் பெரும் பகுதி டெக் மற்றும் ஆப்ரேஷன்ஸ் ஊழியர்கள் சென்னையிலிருந்துதான் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இருந்து இயங்கிவரும் ஒரு நிறுவனம் அமெரிக்காவில் நாஸ்டாக் சந்தையில் பட்டியல் இடப்படுவது மிகப் பெரிய விஷயமாகும். “சர்வதேச விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வாங்கியது போன்ற மகிழ்ச்சியில் இருக்கிறேன்” என ஃப்ரெஷ் ஒர்க்ஸ் நிறுவனத்தின் சி.இ.ஒ.வான கிரீஷ் மாத்ருபூதம் பங்கை பட்டியலிட்டுப் பேசும்போது சொல்லி இருக்கிறார்.