தமிழ்நாட்டில் கல்குவாரிகளை அனுமதிக்கும்போது கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட வேண்டுமென தமிழக அரசிற்கும், அனுமதிக்கப்பட்ட குவாரிகள் மட்டுமே செயல்படுவதை உறுதி செய்ய கடுமையான கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் இரு கிராமங்களில் பள்ளிகளுக்கு அருகில் கல் குவாரிகள் செயல்படுவதால், அதிலிருந்து வெளியேறும் தூசி கலந்த புகை குழந்தைகளின் உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, நிபந்தனைகளைக் கடைப்பிடித்து அனுமதிக்கப்பட்ட கல்குவாரிகள் மட்டுமே இயங்குவதை உறுதி செய்யும் வகையில் கணக்கெடுப்பு நடத்தி அறிக்கையைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டனர்.
மேலும் சம்பந்தப்பட்ட இரு கிராமங்களிலுள்ள பிரச்னை தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை செப்டம்பர் 20ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதனைப்படிக்க…கொடைக்கானல்: தங்கும் விடுதிகள், உணவகங்களில் விலை பட்டியல் வைக்க கோட்டாட்சியர் உத்தரவு