வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக அதிமுக-வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை முதல் வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். இந்தச் சோதனைக் குறித்து அதிகாரப்பூர்வமாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்களை வெளியிட்டிருக்கிறது.
அதில், ‘‘கே.சி.வீரமணி அவரின் பெயரிலும், அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும், தான் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் அமைச்சராக இருந்த பணிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை சேர்த்துள்ளார். இதுதொடர்பாக, வீரமணி, அவரின் உறவினர்கள், முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர், நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடங்களில் சோதனைச் செய்யப்பட்டுள்ளன.
பெங்களூருவில் இரண்டு இடங்கள், சென்னையில் ஆறு இடங்கள் என மொத்தம் 35 இடங்களில் நடத்தப்பட்டுள்ள சோதனையில் 34,01,060 ரூபாய் பணம், ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர், ரோல்ஸ் ராய்ஸ் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்க்குகள், சொத்துகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், 4.987 கிலோ கிராம் (அதாவது 623 சவரன்) தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு, வழக்கிற்குத் தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இவ்வழக்கின் எதிரியான முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் வீட்டு வளாகத்தில் சுமார் 275 யூனிட் மணல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதன் மதிப்பு மட்டும் தோராயமாக 30 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது. விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக லஞ்ச ஒழிப்புத்துறை விலாவரியாக தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதால் கே.சி.வீரமணியிடம் கிடுக்கிப்பிடியாக தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.