கொரோனா வைரஸின் அடுத்தடுத்த உருமாற்றங்கள் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்துமோ என்கிற பீதியில் மக்கள் இருக்கும் நிலையில், இன்னும் ஆறு மாதங்களுக்குள் இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துவிடும் என்றும், அப்போது இதனைக் கையாள்வதும் சுலபமாக இருக்கும் என்றும் தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் சுஜீத் சிங் (Director of the National Centre for Disease Control) தெரிவித்திருக்கிறார்.
`குறிப்பாக நமது கணிப்பின்படி அடுத்த ஆறு மாதங்களில் கொரோனா பரவல் இறுதிக்கட்டத்தை அடைந்துவிடும்’ என்று அவர் கூறியிருப்பது மக்களிடையே பெரும் ஆசுவாசத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனாவின் புதிய திரிபு மட்டுமே மூன்றாவது அலையை ஏற்படுத்தும் ஒரு காரணியாக அமைந்துவிடாது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
Also Read: பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்த கொரோனா! – கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு
இவரது கூற்றுப்படி, கொரோனா பரவல் மக்களிடையே தொடர்ந்து இருக்கும் என்றாலும் அது ஃப்ளூ காய்ச்சல் போல கையாள்வதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் எளிதாக இருக்கும் என்று தெரிகிறது.
ஒரு குறிப்பிட்ட நோயின் பாதிப்பு மற்றும் அந்த நோயால் ஏற்படும் இறப்பின் விகிதம் ஆகிய இரண்டும் கட்டுக்குள் வந்துவிட்டாலே மிக எளிதில் அந்த நோயைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று கூறியிருக்கும் சுஜீத் சிங், சில வாரங்களுக்கு முன்பு வரை கேரளாவில் மிக அதிகமாக இருந்த கொரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை தற்போது தணிந்திருப்பதே இதற்கு ஓர் உதாரணம் என்றும் சொல்லியிருக்கிறார்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக தடுப்பூசி மட்டுமே கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான மிகப் பெரிய அரண் என்றும் அவர் வலியுறுத்துகிறார்.
“இந்தியாவைப் பொறுத்தவரை 75 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசியின் செயல்திறன் 70% எனில் கிட்டத்தட்ட 50 கோடி இந்திய மக்கள் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுவிடுவர். ஒரு தவணைத் தடுப்பூசியை மட்டும் போட்டுக்கொண்டவர்களுக்கு 31% நோய் எதிர்ப்புத்திறன் கிடைக்கும். எனவே இதன்மூலம் ஒரு தவணைத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட 30 கோடி இந்திய மக்கள் நோய் எதிர்ப்புத் திறனைப் பெற்றுவிடுவர்.
Also Read: கொரோனா இறப்புச் சான்றிதழ் பெற இனி புதிய நிபந்தனைகள்; வெளியிட்ட மத்திய அரசு!
ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக இரண்டு தவணைத் தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டுவிட்டோம் என்கிற எண்ணத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமலோ, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலோ இருக்கக்கூடாது. ஏனென்றால் முழுமையாகத் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டவர்களில் 20% முதல் 30% மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் சாத்தியக்கூறுகள் இருப்பதால் எப்போதும் கவனத்துடன் இருப்பது நல்லது” என்றும் சுஜீத் சிங் மக்களை அறிவுறுத்துகிறார்.