19 வயதில் கமெர்ஷியல் பைலட்; அதுவும் அமெரிக்காவில் 18 மாதத்தில் முடிக்க வேண்டிய பைலட் பயிற்சியை 11 மாதத்திலேயே முடித்து இந்தியாவின் இளம் கமர்ஷியல் பைலட் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் குஜராத்தை சேர்ந்த விவசாயியின் மகளான மைத்ரி படேல். அவருக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
குஜராத்தின் சூரத்தை சேர்ந்த மைத்ரி படேலுக்கு வயது 19. அனால் இவர் தொட்டிருக்கும் சிகரமோ மிகப் பெரிது. எட்டு வயதில் அவர் கண்ட கனவை, அவர் தந்தையும் தன் கனவாகக் கொண்டு செயல்படுத்தியதன் பலனாக, மிகச் சிறிய வயதிலேயே அமெரிக்காவில் விமானத்தை இயக்கும் கமெர்ஷியல் பைலட் ஆகியிருக்கிறார்.
Also Read: CA Final: தேசிய அளவில் தங்கை முதலிடம், அண்ணன் 18-வது இடம்; சாதனை படைத்த உடன்பிறப்புகள்!
ஒரு விவசாயியின் மகள் இப்படியான சாதனையை நிகழ்த்தியுள்ளது குறித்து பலரும் பாராட்டி வரும் இந்த வேளையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மைத்ரி படேல், “என்னுடைய எட்டாவது வயதில்தான் முதன்முதலில் நான் விமானத்தைப் பார்த்தேன், அப்போதே முடிவு செய்துவிட்டேன்… எப்படியாவது அந்த விமானத்தை ஒட்டிவிட வேண்டும் என்று.
அதனை என் குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டு எனக்காக நிறைய உதவிகளையும், தியாகங்களையும் செய்தனர். குறிப்பாக, என் தந்தை காந்திலால் படேல். விவசாயியான அவர் விமானங்களைப் பார்க்கும்போது எல்லாம், அவர் மகளான நானும் ஒருநாள் பைலட் ஆக வேண்டும் எனக் கனவு காண ஆரம்பித்தார்.
ஆனால், என் கனவை நிறைவேற்ற அவர் நிறைய கஷ்டப்பட வேண்டியிருந்தது. அவருடைய பூர்விக நிலத்தை விற்று என்னை பைலட் பயிற்சியில் சேர்த்துவிட்டார். சிறு வயதில் இருந்து என்னை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்க பல சிரமங்களை எதிர்கொண்டார்.
அதனை எல்லாம் மனதில் வைத்தே நான் பயிற்சியை மேற்கொண்டேன். 18 மாதங்கள் நடைபெறும் பயிற்சியை பொதுவாகப் பலரும் 18 மாதங்கள் கழித்தும் கூட முடிக்க சிரமப்படுவர்.
Also Read: “ஐந்து மகன்களையும் ராணுவத்தில் சேர்க்க ஆசைப்பட்டேன்!” – `வீரத்தாய்’ விருதுபெற்ற சந்திரிகா தேவி
ஆனால் நான் 11 மாதங்களில் முடித்து, அமெரிக்காவில் கமெர்ஷியல் பைலட்டாக உள்ளேன். விவசாயின் மகளான நான் என்னுடைய கனவை நிறைவேற்றி, என் அப்பாவின் கனவையும் நிறைவாக்கியுள்ளேன்” என்றிருக்கிறார்.
மைத்ரி பட்டேலின் தாய் சூரத் மாநகரட்சியில் சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வருகிறார். சமீபத்தில் மைத்ரியை சந்தித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபாணி, அவருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார்.