கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 9 வயது சிறுமி. அருகில் உள்ள பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வந்துள்ளார். சுமார் 15 தினங்களுக்கு முன், அவரது வீட்டின் அருகே உள்ள பெட்டி கடைக்கு பொருட்களை வாங்குவதற்கு சென்றுள்ளார் அச்சிறுமி. அப்போது அங்கு வந்த அதே கிராமத்தை சேர்ந்த பாரதி (எ) பார்த்திபன் (25), பிரபா (27), கோபி (26) அருள் (24) ஆகியோர் இணைந்து மயக்க மருந்து தடவிய கைக்குட்டையை பயன்படுத்தி அந்த சிறுமியை மயக்கமடைய செய்துள்ளனர். பின் அம்மாணவியை காரில் கடத்தி சென்றுள்ளனர். சற்று தொலைவில் இருக்கும் மற்றொரு கிராமத்தின் உள்ள பெருமாள் கோவிலின் பின் பகுதிக்கு தூக்கிச்சென்று 4 இளைஞர்களும் இணைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மயக்கம் தெளிந்த மாணவியிடம், நால்வரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவோம் என்று கூறி, கத்தியை காட்டி மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. பின், அந்த மாணவியை அதே காரில் அழைத்து வந்து ஊரை ஒட்டி இறக்கி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளனர். பெற்றோர்கள் வெளியூரில் இருந்ததாலும், நான்கு நபர்கள் மிரட்டியதாலும் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல முடியாமல் மனதில் வைத்து துன்பப்பட்டு வந்துள்ளார். அண்மையில் பெற்றோர் ஊருக்கு வந்த நிலையில், தன் தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறி கதறி துடித்துள்ளார் சிறுமி.
அதை கேட்டு பதறிப்போன சிறுமியின் தாய், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை புகார் அளித்துள்ளார். அந்த 4 இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் துறையினர், தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று (14.09.2021) மாலை பார்த்திபன் என்ற இளைஞரை கைது செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள 3 இளைஞர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Also Read: `6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; 56 வயது நபர் போக்சோவில் கைது!’
இது தொடர்பாக திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளரிடம் பேசினோம். “இந்த கொடூர சம்பவம் சுமார் 15 தினங்களுக்கு முன்பு நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் பெங்களூரில் இருந்து ஊருக்கு வந்த போது, பெற்றோர்களிடம் தனக்கு நடந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். அதன் பின் பெற்றோர்கள் நேற்று முன் தினம் புகார் அளித்தனர்.
அதனை தொடர்ந்து போக்சோ உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, நேற்று மாலை பார்த்திபன் என்ற இளைஞரை கைது செய்துள்ளோம். மீதமுள்ள 3 நபர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம் ” என்றனர்.