தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கண்டெய்னர் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களை சுங்கத்துறை அனுமதி பெற்ற கன்டெய்னர் முனைமத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு லாரிகளில் துறைமுகத்திற்கு அனுப்பப்படும். தூத்துக்குடியில் சுங்கத்துறை அனுமதி பெற்ற 20 கன்டெய்னர் முனைமங்கள் உள்ளன. சிப்காட் பகுதியில் உள்ள ஒரு கன்டெய்னர் முனைமத்தில் துபாயில் உள்ள ஜபல் அலி துறைமுகத்திற்கு ரெடிமேட் ஆடைகள் ஏற்றுமதி செய்ய கன்டெய்னர் ஒன்று தயாராக இருந்தது.
சுங்கத்துறை அதிகாரிகளும் அந்த கன்டெய்னருக்குள் ரூ.2 கோடி மதிப்பிலான ரெடிமேட் ஆடைகள் இருப்பதை உறுதி செய்து, கன்டெய்னரை தூத்துக்குடி துறைமுகத்திற்கு அனுப்பினர். தூத்துக்குடியில் இருந்தது துபாய் துறைமுகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்திச் செல்ல இருப்பதாக மத்திய வருவாய்ப் புலானாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு போன் மூலம் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து துறைமுகத்திற்கு ஏற்றுமதிக்காக அனுப்பிய அந்த கன்டெய்னரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்தக் கன்டெய்னரில் இருந்த 5.69 மெட்ரிக் டன் எடையிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.2.30 கோடி என்கின்றனர் அதிகாரிகள். செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கபட்டது தொடர்பாக வி.எம்.எஸ் நகரைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரைக் கைது செய்து விசாரணைக்குப் பிறகு, தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
முதல்கட்ட விசாரணையில், முனைமத்தில் இருந்து சீல் பெற்று கண்டெய்னரை துறைமுகத்திற்கு கொண்டு செல்லும் வழியில் கண்டெய்னரின் சீல் உடையாதபடி, சட்டவிரோதமாக கதவுகளைத் திறந்து ரெடிமேட் ஆடைகளை அகற்றிவிட்டு செம்மரக்கட்டைகளை துறைமுகத்திற்குக் கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. இவை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வந்திருப்பதும், இங்கிருந்து ரெடிமேட் ஆடைகள் என்ற பெயரில் சரக்குக் கப்பலில் துபாயில் உள்ள ஜபல் அலி துறைமுகத்திற்கு கடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
தூத்துக்குடி வழியாக கறி மஞ்சள், செம்மரம், மிளகு, தங்கம், கடல் அட்டைகள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து சோப்புக்கட்டிக்குள் மறைத்து வைத்து கட்த்தி வரப்பட்ட 24 கிலோ எடையுடைய தங்கக்கட்டிகள் பிடிபட்டன. இதைத்தொடர்ந்து இதுபோன்ற தனிநபர் பேக்கேஜ்களுக்கு அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது, மீண்டும் இதுபோன்ற தனிநபர் பேக்கேஜ்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தனிநபர் பேக்கேஜ்கள் மூலமாகத்தான் அதிகமான பொருட்கள் கடத்தி வரப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், இசைக்கருவிகள், மரச்சாமான்கள், ஆகியவை செய்யப்படுகின்றன. இதனால், இதற்கான மவுசும் விலையும் அதிகம் என்கிறார்கள்.