ஒரு காலத்தில், தங்க நகைகள் அணிந்திருப்பது போல, கிரெடிட் கார்டு வைத்திருப்பதும் அந்தஸ்தின் வெளிப்பாடாக இருந்தது. வங்கிகளும் அதிக அளவு பரிவர்த்தனை செய்பவர்களுக்கு மட்டுமே கிரெடிட் கார்டு கொடுத்தார்கள். இன்று, அந்த நிலை மாறிவிட்டது.
“கிரெடிட் கார்டு வேண்டுமா” எனக் கேட்டு அடிக்கடி அழைப்புகள் நமக்கு வருகின்றன. ஏதோ ஓர் ஆவலில் கிரெடிட் கார்டை வாங்கியவர்கள், ஏதோ ஒரு பிரச்னையில் சிக்கிக்கொள்கிறார்கள்.
Also Read: இன்று உலக கல்வி தினம்; நிதி அறிவின் இந்த 10 விதிமுறைகளையும் இன்றைக்கு தெரிஞ்சுப்போமா?
கார்டு விவரங்களைத் திருடி ஒருவருடைய கிரெடிட் கார்ட்டை அவருக்குத் தெரியாமல் மற்றொருவர் பயன்படுத்துவது, பயன்பாட்டில் இருக்கும் கிரெடிட் கார்டுகளைப் போல, போலி கார்டுகளை உருவாக்கி அதன்மூலம் மோசடி செய்வது என பல்வேறு வகையான கிரெடிட் கார்டு மோசடிகள் தொடர்ந்து அரங்கேறுகின்றன.
கிரெடிட் கார்டு மோசடிகளைக் குறைப்பதற்காகவும், பாதுகாப்பை அதிகப்படுத்தவும் கிரெடிட் கார்டு பயன்பாட்டு வழிமுறைகளில் கூடுதல் மாற்றங்களை 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் கொண்டுவரப் போவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றத்தின் அடிப்படையில், ஆன்லைன் மோசடிகளிலிருந்து பயனர்களின் தரவு மற்றும் பயனர்களின் பணத்தைப் பாதுகாப்பதற்காக `Card Tokenization’ என்கிற திட்டத்தை ரிசர்வ் வங்கி செயல்படுத்தவுள்ளது. அதனால் இனி, கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள், இ-காமர்ஸ் வலைதளங்களில் தங்களின் தகவலை சேமித்து வைக்க முடியாது. அதற்கு பதிலாக, டோக்கன் சிஸ்டம் மூலம் பணம் செலுத்தப்படும்.
நம்மில் பெரும்பாலானவர்கள், கிரெடிட், டெபிட் கார்டு விவரங்களை ஒவ்வொரு முறை உள்ளீடு செய்வதற்குப் பதிலாக, கார்டு எண், கார்டு காலாவதியாகும் தேதி என அனைத்து விவரங்களையும் அந்த ஷாப்பிங் வலைதளங்களில் சேமித்து வைக்கிறோம். இதன் காரணமாக, ஒவ்வொரு முறையும் `சிவிவி’ எண்களைக் கொடுத்து பரிவர்த்தனையை மேற்கொள்கிறோம். ஆனால், இனி அப்படி நடக்காது. இ-காமர்ஸ் வலைத்தளங்கள் உங்கள் கார்டின் தகவலை சேமித்துவைக்க முடியாது. அதற்குப் பதிலாக, `டோக்கன் சிஸ்டம்’ மூலம் பணம் செலுத்தப்படும்.
`Card Tokenization’ என்றால் என்ன ?
டோக்கனைசேஷனில் நீங்கள் உங்கள் கார்டு விவரங்களை உள்ளிடத் தேவையில்லை. அதற்குப் பதிலாக, `டோக்கன்’ எனப்படும் தனிப்பட்ட மாற்று எண் இருக்கும். இது உங்கள் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்கும். இதன்மூலம் உங்கள் கார்டு விவரங்கள் பாதுகாப்பாக இருக்கும்.
இனி, நீங்கள் அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் இணையதளங்களில் ஷாப்பிங் செய்தபின்னர் பணம் செலுத்தும்போது, நீங்கள் உங்கள் 16 இலக்க கார்டு எண்ணை உள்ளிட வேண்டியதில்லை; அதற்கு பதிலாக, நீங்கள் டோக்கன் எண்ணை உள்ளிட வேண்டும். இந்த டோக்கன் எண்ணை வங்கிகள் கிரெடிட் கார்டு வாடிக்கையாளருக்கு வழங்கும்.
Also Read: நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா..? உங்களுக்கான 5 தங்க விதிமுறைகள்..!
வாடிக்கையாளர்கள் ஷாப்பிங் செய்யும் ஒவ்வொரு முறையும், அவர்களின் டோக்கன் எண் வங்கிக்கு அனுப்பப்பட்டு, அந்த டோக்கன் எண்ணை அதற்குரிய வாடிக்கையாளர்தான் பயன்படுத்துகிறாரா, அவருடைய டிவைஸில் இருந்துதான் அதை பயன்படுத்துகிறாரா என்கிற தரவுகளை வங்கி சரிபார்த்து, அதன் பிறகே பணத்தை செலுத்துவதற்கான ஒப்புதலை வழங்குபடி இந்த செயல்முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை வந்தபிறகாவது நம்முடைய கிரெடிட் கார்டு தொடர்பான விவரங்கள் திருடு போகாமல் இருக்குமா, அதன்மூலம் நாம் பணத்தை இழக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போகும் நிலை உருவாகுமா என்பதை காத்திருந்துதான் பார்க்கவேண்டும்.