இந்தியாவின் முதல் சுதேசிக்கப்பல், முதல் தொழிலாளர் உரிமைக்கான வேலை நிறுத்தம், முதல் தொழிற் சங்கம் என இன்று நாம் கனவு காணும்சுயசார்பு இந்தியாவின் முன்னோடித் தமிழராக புரட்சி செய்த வ..சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாள் இன்று.

..சிதம்பரம்பிள்ளையின் பிரசங்கத்தையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால் செத்த பிணம் உயிர் பெற்று எழும். புரட்சி ஓங்கும். அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்” 1908ஆம் ஆண்டு சிதம்பரனாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை அளித்த தீர்ப்பில் நீதிபதி ஃபின்ஹே எழுதியுள்ள வரிகள்தான் இவை. வ.உ.சி.யின் தன்னலமற்ற விடுதலை உணர்வுக்கும், அவரின் தியாக வாழ்க்கைக்கும் இந்த வார்த்தைகளை விடவும் பெரிய சான்றிதழ் எதுவும் தேவையில்லை.

சாமானியர்களை விடுதலைபோராட்டத்திற்கு ஈர்த்த காந்தக்குரல்:

1872ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாளுக்கு மூத்த மகனாக பிறந்தவர் வ..சி. இவரது தந்தை உலகநாத பிள்ளை தமிழகத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர், இதனால் சிறுவயது முதலே செல்வசெழிப்புடன் வளர்ந்தார். இளம் வயதிலேயே தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நற்புலமை பெற்ற வ..சி, தந்தையின் வழியில் வழக்கறிஞராகவும் படித்து தேர்ச்சி பெற்றார். பின்னர் வழக்கறிஞர் தொழிலில் புகழுடன், பெரும் செல்வத்தையும் ஈட்டினார், ஏழைகளுக்காக இலவசமாகவும் வாதாடினார். பாலகங்காதர திலகரின் கருத்துகளால் ஈர்க்கப்பட்டு சுதந்திர போராட்டத்தின் தன்னை இணைத்துக்கொண்ட வ.உ.சிக்கு பாரதியார், சசி மகராஜ் ராமகிருஷ்ணானந்தர், சுப்ரமணிய சிவா ஆகியோர் நல்ல நண்பர்களாக இருந்தனர்.

image

தமிழிலும், ஆங்கிலத்திலும் பொருட்செறிவுடன் காந்தக்குரலுடன் கம்பீர உரையாற்றும் வ.சி.சிதம்பரனாரின் குரல்முழக்கம் பல்லாயிரக்கணக்கான சாமானிய மக்களுக்கு விடுதலை உணர்வையூட்டியது. வ.உ.சி. புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்கியதாலும், இவரின் கருத்தாழமிக்க பேச்சாலும் தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக விளங்கினார். மக்களிடம் விடுதலை உணர்வு, சுதேசி உணர்வு, தொழிற்சங்க உணர்வினை ஏற்படுத்த “சுதேசி பிரச்சார சபை”, “தர்ம சங்க நெசவு சாலை”, “தூத்துக்குடி கைத்தொழில் சங்கம்”, “சுதேசிய பண்டக சாலை”, “வேளாண் சங்கம்” போன்றவற்றை ஏற்படுத்தினார்.

சுதந்திர உணர்வை தட்டியெழுப்பிய சுதேசிக்கப்பல்:

ஒரு நாடோ, ஒரு இனமோ அடிமையாக காரணமே வணிகம்தான், ஆங்கிலேயர்களின் இந்தியாவில் அனைத்து தொழில்களும் அவர்களின் வசமே இருந்தது. இதனை உணர்ந்த சிதம்பரனார், தனது சொத்துக்கள் முழுமையும் விற்று, இந்தியா முழுவதும் 40 ஆயிரம் பங்குதாரர்களை உருவாக்கி சுமார் 10 இலட்சம் மதிப்பில் “சுதேசி ஸ்டீம் நேவிகேஷன்” என்னும் நிறுவனத்தை உருவாக்கினார். இதன் தலைவராக வள்ளல் பாண்டித்துரை தேவர் இருந்தார். ஆங்கிலேயர்களின் முக்கிய கப்பல் தடமாக விளங்கிய தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையே பல்வேறு அச்சுறுத்தல்களை தாண்டி இந்தியாவின் முதல் “சுதேசி கப்பலை” இயக்கினார்.

image

வ.உ.சி. அவர்கள் வாங்கிய  எஸ்.எஸ்.காலியா, எஸ்.எஸ். லாவோ கப்பல்களில் 42 முதல் வகுப்புகள், 24 இரண்டாம் வகுப்புகள், 1300 சாதாரண வகுப்புகள் என மொத்தம் 1366 இருக்கைகளும், 4000 டன் சரக்கு மூட்டைகள் ஏற்றும் வசதிகளுடன் இருந்தது.  தூத்துக்குடியில் இருந்து கொழும்புவிற்கு 4 அணா கட்டணம் மட்டுமே சுதேசி கப்பலில் வசூலிக்கப் பட்டது. ஆனால் ஆங்கிலக் கம்பெனியோ 4 ரூபாய் வசூலித்தது. மேலும் சரக்கு மூட்டைகளுக்கும், லக்கேஜூக்கும் தனிக்கட்டணமும் வசூலித்தது.

கட்டணம் மிகக் குறைவாக இருந்ததாலும், சுதேசிக் கப்பல் என்ற காரணத்தாலும் மக்கள் கருதியால் சுதேசிக் கப்பலுக்கு மகத்தான ஆதரவளித்தனர். நஷ்டத்தில் மூழ்கிய ஆங்கிலக் கப்பல் தனது கட்டணத்தை 1 ரூபாயாகவும், பின்னர் 4 அணாவாகவும், குறைத்த பிறகும் கூட்டம் வராததால், பிறகு கட்டணமின்றி ஏற்றிச் செல்வதாக அறிவித்தது, அப்போதும் மக்கள் ஆங்கிலேய கப்பல்களில் ஏறவில்லை. சிதம்பரனாரின் சுதேசிக்கப்பலை அப்போது நாடே கொண்டாடியது, அனைத்து இந்திய பத்திரிகைகளும் கொண்டாடி தீர்த்தது, இந்திய விடுதலைப்போராட்ட வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக இந்த சுதேசி கப்பல் விலங்கியது.

இந்தியாவின் முதல் தொழிலாளர் வேலைநிறுத்தம்:

 ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் இந்தியாவில் தொழிற்சங்கங்கள் இல்லை, தொழிலாளர் உரிமை என்ற வார்த்தை பிரயோகமே இல்லை. எனவே அனைத்து தொழிற்சாலைகளிலும் 12 மணி நேர வேலை, விடுமுறையே இல்லாத பணி, மிகக்குறைந்த கூலி என தொழிலாளர்களின் நிலை பரிதாபகரமானதாக இருந்தது. ஏழை, எளிய மக்களுக்காக இலவசமாகவே வழக்காடிய சிதம்பரனார், ஏழைத்தொழிலாளர்களின் உரிமைகளை மீட்கவும் தலைப்பட்டார். இதன்காரணமாக 1908 ஆம் ஆண்டு தூத்துக்குடி கோரல் நூற்பாலை ஊழியர்கள் மத்தியில் இவரும், சுப்ரமணிய சிவாவும் பிப்ரவரி 23ஆம் தேதி உரையாற்றினார்கள், இவர்கள் உரைவீச்சின் எழுச்சியாக பிப்ரவரி 27 முதல் இந்த தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டனர்.

image

இந்த போராட்டக்காலத்தில் ஊழியர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு வ.உ.சி தனது சொத்த பணத்தை கொண்டு உதவி செய்தார். பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு இடையிலும் நாளுக்குநாள் வீரியமடைந்த இந்த போராட்டத்திற்கு பணிந்து ஆங்கிலேய அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகணை ஏற்றது. எட்டு மணிநேர வேலை, ஞாயிற்றுகிழமை விடுமுறை, ஊதிய உயர்வு ஆகிய ஊழியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.  தொழிற்சங்கங்களே இல்லாத அப்போதைய இந்தியாவில் தொழிலாளர்களை அணிதிரட்டி போராடி உரிமைகளை வென்றெடுத்த கோரல் போராட்டம், இந்திய நாட்டையே திரும்பிப்பார்க்க வைத்தது. இந்திய தொழிற்சங்க வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமைந்த இப்போராட்டத்திற்கு பிறகு பல்வேறு நிறுவனங்களும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை வழங்கியது, அதன்பின்னர் 1920 களில்தான் இந்தியாவில் தொழிற்சங்கங்கள் தோற்றுவிக்கப்பட்டது.

சிறையில் தள்ளிய சுதேசிக்கப்பல்:

சிதம்பரனாரின் சுதேசி கப்பல் பெரும் வெற்றியை பெற்றதால், ஆங்கிலேய கப்பல் நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. மேலும் சுதேசி கப்பல், தொழிற்சங்கங்கள் என ..சியின் விடுதலைப்போராட்டத்தின் அதிரடி முன்னெடுப்புகள் ஆங்கில அரசாங்கத்தை ஆட்டம் காண செய்தது. எனவே அவரை பழிதீர்க்க வன்மத்துடன் காத்திருந்தது ஆங்கில அரசு. இந்த நேரத்தில் விடுதலை போராட்ட வீரர் பிபின் சந்திரபாலின் விடுதலையை கொண்டாட ஆங்கிலேய அரசு தடை விதித்து இருந்தது. அதனை மீறி 09.03.1908ம் தேதியில் தூத்துக்குடியில் சுமார் 20000 மக்கள் கூடிய பொதுக்கூட்டத்தில் வ.உ.சி பேசினார். இதனைத்தொடர்ந்து 12.03.1908 சிதம்பரனார் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.

image

வ.உ.சி. கைது செய்யப்பட்டதை அறிந்தவுடன் மக்கள் கொந்தளித்தனர். திருநெல்வேலியில் கடைகள் அடைக்கப்பட்டன. போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், மண்ணெண்ணெய்க் கிடங்குகள், அஞ்சல் நிலையம், காவல்நிலையம், நகராட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டது. தூத்துக்குடியிலும் கோரல் நூற்பாலை மற்றும் “பெஸ்ட் அண்ட் கம்பெனி” தொழிலாளர்கள் வேலை நிறுத்ததில் ஈடுபட்டனர், நகரில் பந்த் அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டங்களின்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இதுவே இந்தியாவில் முதல் அரசியல் வேலை நிறுத்தம். இந்த வழக்கில் சிதம்பரனாருக்கு முதலில் 40 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது, நாட்டையே கொந்தளிப்பில் ஆழ்த்திய இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு வலுத்தது, அதன்பின்னர் மேல்முறையீட்டில் தண்டனைக்காலம் 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

சிறைக்கொட்டடியும், சுதேசிக்கப்பல் விழ்ச்சியும்:

இளம்வயது முதலே செல்வ செழிப்புடன் வாழ்ந்த சிதம்பரனார் சிறைக்கொட்டடியில் பெரும் துன்பங்களை சந்தித்தார். மாடுகள் இழுக்கும் செக்கினை இவர் இழுத்தார், கல் உடைத்தார், கடுமையான வேலைகளை செய்யவைக்கப்பட்டார், இதனால் சிதம்பரனாரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றது.

உடல் நலிவுடன் சேர்த்து மனம் நலிவுறும் வண்ணம் மற்றொரு அதிர்ச்சியையும் வ.உ.சி சந்தித்தார். சுதேசி கப்பல் ஓராண்டு புள்ளி விவரப்படி லாவோ கப்பல் 115 பயணங்களில் 29773 பேர் பயணித்தாகவும், காலியா கப்பல் 22 பயணங்களில் 2150 பேர் பயணித்தாகவும் புள்ளிவிபரங்கள் வெளியாகின. பெரும் இலாபத்துடன் இயங்கிய சுதேசி கப்பலை முடக்க 24.07.1908 அன்று நடுக்கடலில் வேறொரு கப்பலில் மோதிய வழக்கை கையில் எடுத்தது. இதனால் சுதேசி கப்பல் நிர்வாகிகள் அச்சமடைந்தனர்.  வ உ சி சிறையில் இருந்த போது சுதேசி கப்பல் நிர்வாகிகள் பயந்து போட்டியை சமாளிக்க முடியவில்லை என்று இரண்டு கப்பலையும் விற்றுவிட்டனர். இதில் எஸ்.எஸ்.காலியா கப்பலை வெள்ளையருக்கே விற்றுவிட்டனர், இதனை அறிந்து உள்ளம் குமுறினார் சிதம்பரனார். ” மானம் பெரிதென கருதாமல் வெள்ளையனிடமே விற்றதற்கு பதிலாக அந்தக் கப்பலை உடைத்து நொறுக்கி வங்கக் கடலில் வீசியிருக்கலாம் ” என கொந்தளித்தார்.

image

1912 ஆம் ஆண்டு விடுதலை அடைந்தபோது சிதம்பரனாரின் வழக்கறிஞர் உரிமம் பறிக்கப்பட்டது, இதனால் அவரால் வழக்கறிஞர் தொழில் செய்ய இயலவில்லை. சுதேசி கப்பல், தொழிற்சங்க பணிகளுக்காக சொத்துக்களையும், பொருளையும் இழந்துவிட்டதால் வறுமையின் பிடியில் சிக்கினார். பிறகு சென்னைக்கு சென்று  மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து தோல்வியடைந்தார், பின்னர் அவருக்கு  ஈ.எச்.வாலஸ் என்ற ஆங்கிலேய அதிகாரி வழக்கறிஞர் உரிமத்தை திரும்ப தந்தார், இதன் நன்றி கடனாக தனது கடைசி மகனுக்கு ‘வாலேஸ்வரன்’ என்று பெயர்சூட்டினார். 1924 ஆம் ஆண்டுக்கு பிறகு கோவில்பட்டி, தூத்துக்குடியில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1912 இல் விடுதலையான பிறகு சென்னை, கோவை உள்ளிட்ட தமிழக நகரங்களில் பலவேறு தொழிற்சங்கங்களை உருவாக்கினார் வ.உ.சி.

விடுதலை போராட்ட வீரராக மட்டுமின்றி சிறந்த தமிழ் நூலாசிரியராகவும் இவர் இருந்தார். மெய்யறம், மெய்யறிவு, பாடல் திரட்டு, என் சுயசரிதை, இன்னிலை உரை, சிவஞானபோதம் உரை, திருக்குறள் உரை ஆகிய நூல்களை இவர் எழுதியுள்ளார். பல ஆங்கில நூல்களையும் தமிழில் மொழிப்பெயர்த்திருக்கிறார். விவேகபானு, இந்து நேசன், தி நேஷனல் போன்ற பத்திரிகைகளிலும் ஆசிரியராக பணியாற்றினார் சிதம்பரனார். 1912இல் சிறையிலிருந்து வெளிவந்த பிறகு உடல் நலிவு, பொருளாதார நலிவில் சிக்கிய சிதம்பரனாருக்கு திலகர் மாதம் 50 ரூபாய் நிதி அனுப்பினார் என்பது கண்ணீரை வரவழைக்கும் செய்தி. சுயசார்புடன்  தனது சொத்துக்களை விற்று இந்தியாவுக்கென முதல் சுதேசிக்கப்பலை கட்டிய வ.உ.சி, கடைசிகாலத்தில் வறுமையுடன் உழன்று 1936 நவம்பர் 18 ஆம் தேதி உயிரிழந்தார்.

இதனைப்படிக்க: தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது அவசியமான ஒன்று – சௌமியா சுவாமிநாதன் 

 

 

 

 

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.