நம் வாழ்வியலின் ஓர் அங்கமாக இருப்பது விளையாட்டு. நம் வாழ்வியலோடு மட்டுமன்றி, உலக அரங்கில் நம் நாட்டின் பெருமையை நிலைநாட்டிட உதவிடும் திறவுகோலாகவும் செயல்படக்கூடியது. நம் நாட்டின் சார்பாக, உலக அரங்கில் விளையாடும் எந்த ஒரு விளையாட்டு வீரரும், வெற்றி பெறும் போதும் தேசப்பற்றின் காரணமாக நம் நாட்டின் மக்கள் அனைவரும் அதற்காக பெருமை கொள்கின்றனர். வெற்றியாளரை போற்றுகின்றனர். அப்படி, நாட்டுக்காக பதக்கங்களை சேர்ப்பவர்களின் வரிசையில் விழுப்புரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரும் அடியெடுத்து வைத்துள்ளார்.
விழுப்புரத்தைச் சேர்ந்தவர் பரத். 18 வயதாகும் இவர் அண்மையில், கென்யாவில் நடைபெற்ற 20 வயதுக்கு உட்பட்டோருக்கான வேர்ல்ட் சாம்பியன்ஷிப் அண்டர் – 20 (World championship U – 20) தடகளப் போட்டியில் கலந்துகொண்டார். இந்தியா சார்பாக 4 பேர் கொண்ட அணியியில் ஒரு வீரராக பரத் கலந்துகொள்ள இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது.
Also Read: “ரெண்டு தங்கம் வாங்கியும் ஒழுகுற குடிசையிலதான் வாழுறோம்!”
பரத்திடம் பேசினோம்.
“கடந்த பிப்ரவரி மாதம், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘ஜூனியர் நேஷனல்ஸ்’ 400 மீட்டர் தடகள போட்டி நடந்தது. அதுல 47.71 வினாடியில ஓடி தங்கம் அடிச்சேன். அதுக்கப்புறமா 20 வயதுக்கு உட்பட்டோருக்கான ‘வேர்ல்ட் ட்ரையல்ஸ்’ போட்டி தேசிய அளவுல நடந்தது. அதில் 47.55 வினாடியில ஓடி கோல்ட் அடிச்சேன். அப்போ நல்லா விளையாடியதால கென்யாவில் உள்ள நைரோபியில் நடைபெற்ற “வேர்ல்ட் சாம்பியன்ஷிப் அண்டர் -20” தடகள போட்டியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைச்சது. சுமார் 60 நாடுகளில் இருந்து கலந்துகிட்டாங்க. இந்த தடகளப்போட்டி ‘மிக்ஸட் ரிலே’ போட்டி. இந்தியா சார்பா 4 பேர் போனோம். அந்த நாலு பேர்ல இரண்டு பெண், இரண்டு ஆண் வீரர்கள்.
Also Read: `சாப்பாட்டுக்கே வழியில்ல… முதல்வர் உதவணும்! – கலங்கும் பாரா ஜூடோ வீராங்கனை
இதுல தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் நான் மட்டும்தான். கடந்த 18-ம் தேதி போட்டி நடந்தது. எனக்கு அப்போ கால்ல கொஞ்சம் இஞ்சுரி இருந்துச்சு. வலி ஒரு பக்கம் இருந்தாலும், எங்க பயிற்சியாளர் என்ன நல்லா ஊக்கப்படுத்தினாங்க. ‘நம்மல நம்பி இருக்கிற நாட்டுக்காகவும், நம்ம அணிக்கான வெற்றிக்காகவும் தான் நாம ஓடுகிறோம்’ என்ற எண்ணம் மட்டும்தான் மனசுல இருந்துச்சு. இறுதியில வெண்கலப்பதக்கம் வென்றோம். 20 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில், இந்தியா அளவுல இது 5-வது பதக்கம். நம்ம தமிழகத்துக்கு இதுதான் முதல் பதக்கம். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாவட்டத்துல என்ன மாதிரி நிறைய பேரு திறமையோடு இருக்காங்க. ஆனா அவங்களை வெளிக்கொண்டு வருவதற்கும், பயிற்சி அளிப்பதற்கும் சரியான வசதி வாய்ப்பு இங்கே இல்லை. அதனால், விளையாட்டுக்காக இந்த மாவட்டத்தில சிறப்பு ஏற்பாடுகள் பண்ணனும்” என்றார்.