முதல்வரின் நலத்திட்ட அறிவிப்புகளால் தங்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்பதோடு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் செழிக்கும் என நம்புவதாக கூறுகின்றனர் முகாம்வாசிகள்.
பல ஆண்டுகளாக முகாம்களில் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்கு முதல்வரின் அறிவிப்புகள் முகமலர்ச்சியையும், அகமலர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அரசின் அறிவிப்புகளுக்கு நன்றி தெரிவித்த திருவள்ளூர் முகாம் வாசிகள் கல்விக்கடன் கிடைக்க அரசு வழிவகை செய்தால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் இன்னும் நன்றாக இருக்கும் என்ற கருத்தையும் முன்வைத்தனர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் உள்ள அகதிகள் முகாம்வாசிகள் முதல்வரின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்ததுடன், திட்டங்களால் தாங்கள் பலம்பெறுவோம் என்று நம்பிக்கையும் தெரிவித்தனர்.
முகாம்களும் முதல்வரின் அறிவிப்பும்
1983-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்துக்கு பிறகு தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளது. அதிகளாக குடியேறிவர்களுக்காக சென்னை, திருச்சியில் உள்ள 2 சிறப்பு முகாம்கள் உட்பட 108 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. முகாம்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், வெளியே 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் தற்போது வசித்து வருவதாக தெரிகிறது. இப்படி பல முகாம்களில் தவிக்கும் இலங்கை தமிழர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டார். அதன்படி, இலங்கை தமிழர் முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7 ஆயிரத்து 469 வீடுகள் புதிதாக கட்டி தரப்படும் என்று கூறினார். முகாம்களில் மின் வசதி , கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்த 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்றார். இலங்கை தமிழர்களின் பிள்ளைகள் பொறியியல் படிப்பு பயில, தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் 50 மாணவர்களுக்கு கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை அரசே ஏற்கும் என அறிவித்த முதலமைச்சர் ஐந்தாயிரம் முகாம்வாழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடியதிறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்தார். முகாம்வாழ் இலங்கை தமிழர்களுக்கு விலையில்லா எரிவாயு இணைப்பு மற்றும் இலவச அடுப்பு வழங்கப்படும் என்று கூறினார். அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த மொத்தமாக 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
எந்த முதல்வரும் செய்யாதது – ஆர்.கே.ராதாகிருஷ்ணன்
இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகள் பல்வேறு தளத்திலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இலங்கை தமிழர்களுக்காக எந்த முதல்வரும் செய்யாத நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன். அதே வேளையில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கனிமொழி – திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து
இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிர்காலத் திட்டங்கள் மூலமாக கெளரவமான வாழ்க்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளிப்பத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.