சென்னை பூந்தமல்லியில் வெறிநாய் கடித்து ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
அகரமேல் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த சிறுவன் மோனிஷ் உள்பட 5க்கும் மேற்பட்டோரை வெறிநாய் கடித்துள்ளது. இதில் காயமடைந்த அவர்கள் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதாகவும், ஆனால் சிறுவன் மோனிஷ் நாட்டு மருந்து மட்டும் எடுத்துக்கொண்டு அலட்சியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுவனுக்கு நாய் போன்று வாயில் இருந்து எச்சில் ஊறியது, தண்ணீரை கண்டால் தப்பித்து ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் ஏற்பட்டது.
இதையடுத்து இரு நாட்களுக்கு முன்பு சிறுவனை, அவனது பெற்றோர் எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்த போது, மருத்துவர்கள் பரிசோதனையில் ரேபிஸ் நோய் பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இந்நிலையில் உரிய சிகிச்சை அளித்து வந்த போதும் பலன் அளிக்காமல் சிறுவன் உயிரிழந்தார். இதனிடையே, சிறுவனுடன் பழகியவர்கள் குறித்து கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
வெறிநாய் கடித்தால் குணப்படுத்தலாம் – மருத்துவர்
வெறிநாய் கடித்தால் குணப்படுத்தலாம் என்றும் அதே நேரத்தில் உடனடியாக சென்று ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்கிறார் மருத்துவர் சுப்பிரமணியன்.
நாய் கடித்த இடத்தை ஓடும் நீரில் கழுவ வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். உதாரணமாக தண்ணீர் குழாயை (WATER TAP) திறந்து விட்டு, அதிலிருந்து வெளிவரும் நீரில் கழுவுவது.